இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், சாதனைகளின் நாயகன், சச்சின் சாதனையை முறியடிக்கும் திறமை உள்ள ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய விராத்கோஹிலியின் வெற்றிக்கு என்னென்ன காரணங்கள் தெரியுமா? சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறிய விவரங்கள் உங்களுக்காக இதோ:
குறைந்த நண்பர்கள். மிச்சப்படுத்தப்பட்ட நேரம்
அதிர்ஷ்டவசமாக எனக்கு நிறைய நண்பர்கள் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் நான் அவர்களுடன் நிறைய நேரம் செலவு செய்திருப்பேன். நான் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த இதுவு8ம் ஒரு காரணம். அதிக நண்பர்களும், அதிக உறவினர்களும் இருந்தால் அதிக நேரம் அவர்களுடன் செலவு செய்தே தீர வேண்டிய நிலை வரும். அதனால் ஒருவருடைய ஆக்கபூர்வ நேரம் அநாவசியப்படும். இந்தக் கருத்தை விராத்கோஹ்லி இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசர் ஹூசைனிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
நல்ல மனநிலை
ஒரு நல்ல விளையாட்டு வீரருக்கு டெக்னிக்கல் மிகவும் முக்கியமானதுதான். ஆனால் ஒரு வீரர் நல்ல மனநிலையில் உள்ளதைவிடச் சிறப்பான டெக்னிக் வேறு இருக்க முடியாது என்பது என்னுடைய கருத்து. நல்ல இன்சுவிங்கர் பந்துகளை நான் மிகவும் எதிர்பார்ப்பேன். இன்சுவிங்கர் பந்துகளை நான் ஒரு அடி மேலெழுந்து அடிப்பது என் பலம். இன்சுவிங்கரை எந்த அளவுக்கு எதிர்பார்க்கின்றேனோ அதே அளவுக்கு அவுட்சுவிங்கை நான் கண்டு கொள்வதில்லை. இந்தக் கடினமான பயிற்சி விராத் கோஹ்லியின் ஸ்பெஷல் என்று கூறலாம்.
சூழ்நிலையை மாற்றிக் கொள்வது
கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, விராத் கோஹ்லியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்தச் சூழ்நிலைக்கு பின்னர்தான் தான் அவர் தன்னையே மாற்றிக் கொண்டார். இதன் விளைவாக விராத் கோஹ்லி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த தொடரில் நான்கு சென்சுரிகளை அடித்து அனைவரையும் அசத்தினார்.
நமக்கு நாமே அழுத்தம் கொடுக்கலாமா?
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னர் தனக்கு தானே மிகுந்த அழுத்தம் கொடுத்து கொண்டதால்தான் தன்னால் தனது திறமையை முழுவதும் வெளிப்படுத்த முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்திய துணைக்கண்டத்தில் உள்ள வீரர்கள் வெளிநாடுகளில் நன்றாக விளையாடியே தீர வேண்டும் என்ற அழுத்தம்தான் ஒரு வீரருக்குத் தோல்வியை தருகிறது. வெளிநாடுகளில் நன்றாக விளையாடாத வீரரை நல்ல வீரராக யாரும் கருதுவதில்லை. இந்த அழுத்தத்தை நமக்கு நாமே கொடுத்து கொள்ளாமல் இயல்பாக விளையாடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.