நிதி ஆண்டு முடியும் தருவாயில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகம் உள்ள வருமானத்திற்குக் கணிசமான தொகை வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும்.
வரியைக் குறைக்கும் ஓய்வூதிய திட்டங்கள் தற்போதைய வருமானத்திற்கு வரிச் சேமிப்பு மற்றும் உங்களின் ஓய்விற்குப் பின்பு நிரந்தர வருமானம் என இரு வகைகளில் உதவும். இப்பொழுது ஓய்வூதிய திட்டங்களுக்கு எவ்வாறு வரிகள் விதிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டு நிலைகள்
பலவிதமான ஓய்வூதிய திட்டங்கள் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. பொதுவாக ஓய்வூதிய திட்டங்களை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம், ஒன்று பணம் செலுத்தும் காலம் (அகுமலேஷன்), இரண்டு திட்ட முதிர்ச்சியின் பின்பு நீங்கள் பணத்தைப் பெறும் காலம் (டிஸ்ட்ரிபியூஷன்).
இரண்டு முறை
ஓய்வூதிய திட்டம் முதிர்வு (மெச்சூரிட்டி) பலனை இரண்டு விதமாகப் பெறலாம் ஒன்று முதலீடு அனைத்தையும் மொத்தமாகப் பெறலாம் அல்லது மாதம்/ஆண்டு வருமானமாகப் பெறலாம்.
நீங்கள் எந்த முறையில் முதிர்வு தொகையைப் பெற விரும்புகிறீர்கள் என்பதைத் திட்ட தொடக்கத்திலேயே தேர்வு செய்ய வேண்டும், இருந்தாலும் உங்கள் தேர்வை மறு பரிசீலனை செய்யத் திட்ட முதிர்வின் ஆறு மாதங்களுக்கு முன்பு அவகாசம் வழங்கப்படும்.
80சிசிசி வரிச் சட்டம்
ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது செக்சன் 80சிசிசி இன் கீழ் ஒரு நிதி ஆண்டில் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். ஆனால் 1.5 லட்சம் வரம்பு என்பது செக்சன் 80சி இன் கீழ் வரும் அனைத்துப் பிரிவுகளின் கூட்டுத் தொகை என்பதை நினைவில் கொள்ளவும்.
முதிர்வு தொகை
ஓய்வூதிய திட்ட முதிர்வு தொகையின் மூன்றில் ஒரு பங்கு தொகையை மொத்தமாகவும் மீதி தொகையை மாத வருமானமாகப் பெறலாம், இம்முறை கம்யூட்டட் என அழைக்கப்படும். மேலும் இவ்வாறு எடுக்கும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் செக்சன் 10(எ)ன்படி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மரணம்
எதிர்பாராத விதமாகப் பணம் செலுத்தும் காலத்தின் போது (அகுமலேஷன் பீரியட்) பாலிசிதாரர் மரணம் அடைந்தால், அவரது குடும்பத்திற்கு (நாமினி) வழங்கப்படும் உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு வரிகள் எதுவும் கிடையாது.
வரி விதிப்பு
திட்ட முதிர்விற்குப் பின்பு பெறும் ஓய்வூதிய தொகை ஓய்வு கால ஊதியம் பெறுபவரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு வருமான வரி சட்டத்தின் படி வரி விதிக்கப்படும்.
பாதியிலேயே நிறுத்தம்
தவிர்க்க முடியாத காரணங்களால் ஓய்வூதிய திட்டத்தைப் பாதியிலேயே நிறுத்த (சரண்டர்) நேரிட்டால், நீங்கள் ஏற்கனவே செலுத்திய பிரீமியத்திற்குப் பெற்ற வரி சலுகையைப் பொறுத்து அப்போது கிடைக்கும் வருமானத்திற்கும் வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(கொசுறு செய்தி: உங்களுக்குத் தெரியுமா உங்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வைப்பு நிதியின் ஒரு பகுதி உங்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படுகின்றன.)