புதிதாகப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட நினைப்பவர்களின் மனதில், என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? இலாபம் வருமா? நஷ்டம் வருமா? எனப் பல கேள்விகள் வரிசைகட்டி நிற்பது இயல்புதான். பங்குவர்த்தகத்தை எளிதாக அணுகுவது எவ்வாறு? மற்ற முதலீடுகளைக் காட்டிலும் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்வது இலாபகரமானதா? என அறிந்து கொள்ளப் பலர் ஆர்வமாக உள்ளனர். பங்குவர்த்தகத்தில் உள்ள நன்மை தீமைகள் குறித்து மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
எளிமையானது மற்றும் வசதியானது
பங்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரை நேரம் மிகவும் முக்கியமானது. பங்குப் பரிவர்த்தனைக்கான இணையதளப் பக்கங்கள், குறித்த நேரத்தில் மிக விரைவாகப் பங்குப் பரிவர்த்தனையில் ஈடுபடத் துணைநிற்கின்றன. இணையம் வழியாகப் பங்குவர்த்தகத்தில் நாமே நேரடியாக ஈடுபடலாம். பழைய முறையிலான பங்குவர்த்தகம் சிக்கல்கள் மிகுந்ததாக இருந்தது. அதிகமான நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கக் கூடிய வகையில் இருந்தது. தற்போதைய இணைய வளர்ச்சி பங்குவர்த்தகத்தை மிக எளிமையானதாக மாற்றியுள்ளது.
நல்ல வருமானத்திற்கான வாய்ப்பு
இணையம் வழியாகப் பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்களின் முக்கிய நோக்கம், தான் ஏற்கனவே பார்க்கும் வேலையை விட்டுவிட்டு பங்கு வர்த்தகம் மூலம் நல்ல இலாபம் சேர்க்க வேண்டும் என்பதுதான். நாம் எந்த அளவுக்குத் துணிந்து பங்கு வணிகத்தில் ஈடுபடுகிறோம் என்பதைப் பொறுத்து வருமானத்தை ஈட்டமுடியும். பங்கு வர்த்தகத்தில் நாம் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறோம், நாம் முதலீடு செய்துள்ள பங்குகளுக்குரிய நிறுவனங்கள் எந்த அளவுக்கு இலாபத்துடன் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்துப் பங்கு வர்த்தகத்தில் நம்முடைய வருமானம் பெருகும்.
முதலீடு தேவைப்படாத பங்குகள்
பங்குகள் என்பவை நிதிசார்ந்த ஒப்பந்தங்கள் ஆகும். முதன்மையான சொத்துக்களைப் பொறுத்து அதனுடைய மதிப்பு மாறுபடுகிறது. அவை, பங்குகள், குறியீடுகள், பங்கு வணிகப் பொருட்கள் (Commodity), நாணயங்கள், நாணய மாற்று விகிதங்கள் அல்லது வட்டி விகிதங்கள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். இவற்றின் மீதான முதலீடுகள் வருமானம் ஈட்டுவதற்குத் துணை செய்கின்றன. நாம் எவற்றின் மீது முதலீடு செய்திருக்கிறோமோ அவற்றின் எதிர்கால மதிப்பைப் பொறுத்து நம்முடைய வருமானம் அமையும்.
எளிதான பரிமாற்றம்
சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பப் பங்குகளை வாங்குவதும் விற்பதும் மிக எளிது. பங்குச் சந்தையில் உள்ள இத்தகைய தன்மை நம்மை நஷ்டத்திலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வருமானத்திற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது.
பங்குகளின் சரியான விலையைக் கண்டறிதல்
சந்தையின் நிலவரம், தேவை மற்றும் பிற காரணிகளுக்கு ஏற்பப் பங்குகள் மற்றும் பங்கு வர்த்தகப் பொருட்களுக்கான (Commodity) மிகப் பொருத்தமான விலையைக் கண்டறிய முடியும். எண்ணிக்கை, அளவு, இடம், வாங்குவோருக்கும் விற்போர்க்கும் இடையிலான போட்டி மற்றும் அவர்களுடைய வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்பப் பொருத்தமான விலையைக் கண்டறியலாம். பங்கு வர்த்தகத்தில் உள்ள இத்தன்மை பாதுகாப்பான முதலீட்டுக்கு உத்தரவாதமளிக்கிறது.
இழப்பிற்கான வாய்ப்புகள் அதிகம்
எளிதாகப் பணம் சேர்ப்பதற்கு ஏற்ற வழியாகப் பங்கு வர்த்தகம் இருப்பதைப்போலவே, சேர்த்து வைத்த பணத்தை எளிதாக இழப்பதற்கு உரிய வழியாகவும் பங்கு வர்த்தகம் அமைகிறது. "பெரிய அளவிலான முதலீட்டை இழந்தால்தான் வணிகத்தில் சிறிதளவு இலாபத்தைப் பார்க்கலாம்" என்னும் பழமொழியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
அதிக அளவிலான வரிச்சுமை
நிறுவனங்களும் தனிநபர்களும் தங்களுடைய வருமானத்துக்கு ஏற்ப அவ்வப்போது உள்ள வருமானவரி விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வருமானவரி செலுத்த வேண்டியுள்ளது. பங்குவர்த்தகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வருமான வரிவிதிப்புக்கு உட்பட்டவையாகும். பங்குவர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு வருமானவரி தொடர்பான நடவடிக்கைகள் கூடுதல் சுமையாக வந்து சேரும்.
பங்குவர்த்தகச் செயல் தடை (Circuit Breaker)
குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் பங்குச் சந்தையின் நடவடிக்கைகளைச் சீர்ப்படுத்துவதற்காக "செயல் தடை (circuit breaker)" என்னும் முறை பங்குச் சந்தையில் அமல்படுத்தப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 2110.79 புள்ளிகளுக்கும் கீழாகச் சென்றது. என்னவென்று காரணம் அறியமுடியாத வகையில், பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவியதால், பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டன. இது போன்ற நடவடிக்கைகள் சமஉரிமைப் (Equity) பங்கு வைத்திருப்பவர்களுக்கும் சமஉரிமைப் பங்குச் சந்தை பரிமாற்றத்திற்கும் உதவிகரமாக இருக்கும்.