இந்திய மக்கள்தொகையின் பெரும் பகுதி இன்னும் வறுமையில் இருப்பதால், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளைக் கூடப் பெற வசதியில்லாமல் இருக்கின்றனர்.
சுகாதாரம் என்பது மருத்துவக் கட்டமைப்புகள் மட்டுமல்லாது மருந்துகளையும் சேர்த்தே குறிக்கிறது. இந்தியாவில் பெரிய பிரச்சனை என்னவெனில், ஒரே மருத்துவக் குணம் உள்ள பிரபலமான நிறுவனத்தின் மருந்தின் விலை பிரபலமில்லா நிறுவனத்தின் மருந்தின் விலையை விட மிக அதிகமாக இருப்பதே.
எனவே, இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தரமான பொது மருந்துகள் நியாயமான விலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மருத்துவ ஆலோசனை கழகம் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் வாயிலாக இந்த மருந்துகள் விற்கப்பட்டு அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த லாபத்தில் மருந்துகளை விற்பனை செய்யும் இந்த மருந்தகங்களைத் தனிநபரோ அல்லது நிறுவனமோ நடத்தலாம். மக்கள் மருந்தகம் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இங்குக் காணலாம்.
BPPI அமைப்பின் பணி
இந்திய மருத்துவப் பொதுத்துறை நிறுவனங்கள் பணியகம் (Bureau of Pharma PSUs of India -BPPI) என்ற அமைப்பு, பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அதன் பணிகள் பின்வருமாறு.
1) அனைவரும் தரமான பொது மருந்துகள் நியாயமான விலையில் கிடைக்க வழிவகைச் செய்தல்
2)மருந்தகங்கள் மூலம் பொது மருந்துகளைச் சந்தைபடுத்துதல்
3)பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளைக் கொள்முதல் செய்தல்
4) மருந்தகங்கள் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணித்தல்
மக்கள் மருந்தகங்களைத் துவங்குவதற்கான தகுதிகள்
நீங்கள் தனிநபராக இருந்து, பின்வரும் தகுதிகளைப் பெற்றால் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகத்தைத் துவங்கலாம்.
1) நீங்கள் மருத்துவராக இருந்தால் (அல்லது)
2)பதிவு செய்யப்பட்ட மருத்துவத் தொழில்முறை வல்லுநராக இருப்பின் (அல்லது)
3) B.Pharma/D.Pharma பட்டங்களைப் பெற்றிருந்தால்
மேற்கண்ட தகுதிகளை நீங்கள் பெற்றிருக்கவில்லை எனில், B.Pharma/D.Pharma பட்டம் பெற்றிருப்பவர்களைப் பணியில் அமர்த்தி மருந்தகங்களைத் துவங்கலாம்.
மேலும், தனிநபர்கள் அரசு மருத்துவமனை வளாகங்களில் மருந்தகங்களைத் துவங்கவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது NGO மற்றும் அறக்கட்டளைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இலாப வரம்பு மற்றும் ஊக்கத்தொகை
மக்கள் மருந்தகங்களுக்கான ஏஜென்சியை நீங்கள் பெற்றால், மருந்தின் விலையில் 20% லாபமாக வழங்கப்படும்.
உங்களின் மருந்தகம், இணையதளம் வாயிலாக BPPI யின் மென்பொருளுடன் இணைந்திருந்தால் ரூ2.5லட்சம் வரை ஊக்கத்தொகை பெற நீங்கள் தகுதியுடையவர்கள். இது உங்கள் மாதாந்திர மொத்த விற்பனையில் 15% ( அதிகபட்சம் ரூ10,000 ) எனக் கணக்கிட்டு மாதாமாதம் வழங்கப்படும். இந்த அதிகபட்ச தொகை வடகிழக்கு மாநிலங்கள், நக்சல் பாதிப்புப் பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில் ரூ.15,000 ஆக இருக்கும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு மேற்கூறிய ஊக்குத்தொகையுடன், ரூ50,000 மதிப்புடைய மருந்துகளும் முன்னதாகவே வழங்கப்படும்.
மக்கள் மருந்தகங்களைத் துவங்க தேவையானவை
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 120சதுர அடி உள்ள சொந்த அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்ட வாடகை இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். BPPI இடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்காது.
மருந்தாளுநரைத் தேர்வு செய்வதற்கான அவர் பெயருடன் கூடிய ஆதாரம் மற்றும் அவர் மாநில அமைப்பில் பதிவு செய்ததற்கான ஆதாரம்( கடைசி அனுமதி பெறும் போதும் சமர்ப்பிக்கலாம்)
மாற்றுத்திறனாளிகள், SC/ST என உரிய அலுவலரின் சான்றிதழ் (தேவைப்படின்)
விண்ணப்பிப்பது எப்படி?
உங்கள் விண்ணப்பத்தை இணையதளம் வழியாகவும், நேரிடையாகவும் சமர்ப்பிக்கலாம்.
இணையதளம் வாயிலாக
Www.janaushadhi.gov.in என்ற இணைய முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
நேரிடையாகச் சமர்ப்பிக்க
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பின்னர் வழிகாட்டுதலின் படி பூர்த்திச் செய்த விண்ணப்பத்தைக் கீழே குறிப்பிட்ட முகவரி தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
The CEO,
Bureau of Pharma Public Sector Undertakings of India (BPPI),
IDPL Corporate Office,
IDPL Complex,
Old Delhi Gurgaon Road,
Dundahera,
Gurgaon - 122016 (Haryana)
கடிதத்தின் உறையில், முகவரிக்கு முன்னதாக
"Application For The New PMBJK" என்பதைக் கண்டிப்பாகத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.