பெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் சில்லறை கடன் 25% வளர்ச்சி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன. எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி என்பது, கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) அல்லது பிடிமானமில்லா கடன்கள் (unsecured loans) போன்ற சிறு கடன்களால் நிகழ்வது.
கோடாக் பங்கு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2018-22 நிதியாண்டுகளில் சில்லறை கடன்கள் 16% வரை வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாகவும், ஒட்டுமொத்த கடனில் அதன் பங்களிப்பு 18% லிருந்து 28% ஆக உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய வங்கிகள்
பெரும்பாலான தனியார் வங்கிகளும், பாரத ஸ்டேட் வங்கியும் இதில் பெருமளவில் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் தரவுகளின் படி, பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல வீட்டுக்கடன் போன்ற பிடிமானமில்லா கடன்களைக் காட்டிலும் கடன்அட்டை போன்ற பிடிமானமில்லா கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் அதிகரித்துள்ளன.
முக்கியக் காரணம்
இரண்டு முக்கியக் காரணங்களுக்காகச் சில்லறை கடன் பங்களிப்பு வளர்ச்சியடைய, வங்கிகள் தங்கள் வழிமுறையை மாற்றியுள்ளதாக அந்த அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. ஒன்று, பெருநிறுவன கடன்கள் இன்னும் முழுவதுமாக வீழ்ச்சியடையவில்லை அதே சமயம் கடனை திரும்ப வசூலிப்பது மிகவும் கடினமானது. இரண்டாவது, சில்லறை கடன் 2007நிதியாண்டிற்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த சில ஆண்டுகளாகச் சில்லறை வாடிக்கையாளர்களின் இருப்புநிலை அறிக்கை, பெருநிறுவன அறிக்கையை விட வலுவாக இருப்பதால், வங்கிகள் சில்லறை கடனில் கவனம் செலுத்த ஊக்கத்தை அளிக்கிறது.
இதனால் வங்கிகள் கூவிக்கூவி கடன் வழங்கும் போது, வாடிக்கையாளர்கள் அடிப்படை தவறுகளைத் தவிர்க்க மூன்று முக்கிய விசயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உங்களால் திருப்பிச் செலுத்தும் அளவிற்குக் கடன் வாங்குங்கள்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பர். உங்களின் வருமானத்திற்கு ஏற்ப வங்கிக்கடனின் விகிதாச்சாரமும் அமைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் தவணைத்தொகையை (ஈ.எம்.ஐ) செலுத்துவதால் உங்கள் பொருளாதாரக் குறிக்கோள்களை அடையமுடியாமல் போய்விடும். பொதுவாக , வீட்டுக்கடனின் தவணைத்தொகை உங்கள் வருமானத்தில் 40% க்கு குறைவாக இருக்கவேண்டும்.இதுவே கார் லோனிற்கு 15% மற்றும் தனிநபர் கடனுக்கு 10% க்கு மிகாமல் இருக்கவேண்டும். உங்களின் அனைத்து வித கடன்களின் தவணைத்தொகை, மாத சம்பளத்தின் 50%ஐ விட அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவணைத்தொகையைச் செலுத்த தாமதப்படுத்தவோ அல்லது தவறவோ கூடாது. இல்லையென்றால் உங்கள் கடன் மதிப்பெண் (கிரிடிட் ஸ்கோர்) பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் கடன் பெற விண்ணப்பிக்கும் போது சிக்கல் ஏற்படுத்தும்.
கடனை திருப்பிச் செலுத்தும் கால அளவை குறைத்து, வட்டியை குறைக்கலாம்
எந்த அளவு கடனை திரும்பச் செலுத்தும் காலத்தைக் குறைக்கிறோமோ, அந்த அளவுக்குச் செலுத்தும் வட்டியும் குறையும். உதாரணமாக, வீட்டுக்கடனுக்கான கால அளவு 25 ஆண்டுகள் எனில், 25 ஆண்டுகள் வரை தவணையைச் செலுத்தக்கொண்டிருக்க வேண்டாம். கார் லோன் என்றால் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இளைஞர்கள் துவக்கத்தில் தவணைத்தொகையின் சுமையைக் குறைக்க அதிகக் கால அளவை தேர்ந்தெடுக்கலாம். உங்களிடம் அதிகப் பணம் இருந்தால் அசலை முன்கூட்டியே திரும்பச் செலுத்துவதன் மூலம் கால அளவு மற்றும் வட்டியை குறைக்கலாம்.
அதிகமதிப்புள்ள கடன்களை உறுதியான முதலீடுகளாக மாற்றுங்கள்
அதிகமான பிடிமானமில்லா கடன்களை வைத்திருந்தால், பரஸ்பரநிதி அல்லது ஆயுள்காப்பீடு திட்டங்கள் போன்ற உறுதியான முதலீடுகளின் (Pledging investment) மீது கடன் பெற்று அவற்றைத் திரும்பி செலுத்தவும். இந்த வகைக் கடன்களின் மீதான வட்டி, தனிநபர் கடன்களைக் காட்டிலும் மிகவும் குறைவு. வங்கிகள் வாடிக்கையாளர்களின் பரஸ்பரநிதி கணக்கின் மீது அதன் பங்குகளைக் கைப்பற்றிக் கடன் வழங்குகின்றன.கடனை திருப்பிச் செலுத்தியவுடன் பரஸ்பர நிதியின் பங்குகள் மீதான உரிமை முதலீட்டாளர்களுக்கு விடுவிக்கப்படும். பங்குகளுடன் இணைந்த பரஸ்பர நிதி முதலீட்டில், மொத்த சொத்து மதிப்பில் 50% கடனாக வழங்கப்படும். ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை, வங்கிகள் பாரம்பரிய ஆயுள் காப்பீட்டின் மீது கடன் வழங்குகின்றன. ஆனால் தவணைத் திட்டங்களின் மீது கடன் வழங்குவதில்லை. காப்பீட்டு காலத்திற்குள் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்தவேண்டும்.