இந்தியாவில் வாழ்கின்ற சமூகத்தினருள் பலர் காலம் காலமாக வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைமுறைகளைக் கடந்தும், வணிகம் அவர்களுடைய பரம்பரைத் தொழிலாக இருந்து வருகிறது. இந்தியாவின் மேற்கு மாநிலங்களான, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வசிக்கும் சமூகத்தினர் தங்களுடைய வணிகத்திறனால் புகழ்பெற்று விளங்குகின்றனர். இவர்கள், வணிகத்திற்கும், பணத்திற்கும் எப்பொழுதும் மதிப்பு அளிப்பவர்கள் என்பதை இவர்களோடு பழகியவர்கள் நன்கு அறிவர். பணத்திற்கு உரிய வகையில் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பது இவர்களுடைய குழந்தைப் பருவம் முதலே இதயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும். பணத்தை எவ்வாறு சேமிப்பது மற்றும் வியாபாரத்தைச் சிறப்பாக நடத்துவது எப்படிப் போன்ற விசயங்கள் குறித்துக் குழந்தைப் பருவம் முதலே இவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். அதன் காரணமாக அவர்கள் வளர்ந்த பிறகு வணிகத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவர்களாக மாறி அதில் கிடைக்கும் வெற்றியின் மூலம் பொருளாதாரப் பலம் படைத்தவர்களாக வலம் வருகின்றனர்.
நம்முடைய பிள்ளைகளுக்கு, வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வை அவர்களின் குழந்தைப் பருவம் முதற்கொண்டே ஊட்டுவது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு வலுச் சேர்க்கும். பணத்தின் தேவையையும் அதனை மேலாண்மை செய்வதையும் குழந்தைகள் எளிதாகக் கற்றுக் கொள்வர். பள்ளிக் கூடத்தில் கற்றுக் கொள்ளும் கணக்குப்பாடம் குழந்தைகளின் பொருளியல் அறிவை விரிவாக்கத் துணை நிற்கும். பணம் சம்பாதிப்பது, செலவு செய்வது, சேமிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்குப் போதிக்க வேண்டும். "பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை" என்னும் வள்ளுவர் வாக்கின் பொருளை, குழந்தைகளின் மனதில் விதைத்து விட்டால் அவர்களின் எதிர்காலம் குறித்துப் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
குழந்தைகளுக்குப் பொருளாதார அறிவைப் புகட்டப் பல வழிகள் உள்ளன.
பணத்தின் மதிப்பை உணரச் செய்தல்
பணத்தின் மதிப்பைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். பணம் நம் கையில் இருக்கும் வரைதான் மதிப்பு, அதனைச் செலவு செய்துவிட்டோம் என்றால் அதனுடைய மதிப்புப் போய்விடும் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பொருள்களை வாங்க கடைக்குச் செல்லும் பொழுது குழந்தைகளையும் அழைத்துச் சென்று அவர்களுக்குப் பணத்தின் மதிப்பைக் கண்கூடாகக் காட்ட வேண்டும்.
செலவுகளை இனம் பிரித்துக் காட்டல்
தேவையான செலவு எது? தேவையற்ற செலவினங்கள் எது? என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைத்துவிட்டால், அவர்களுக்குப் பொருளியல் குறித்துப் பாதிக் கற்றுக் கொடுத்ததற்குச் சமம். இந்த வேறுபாட்டை அவர்கள் புரிந்து கொண்டால் தேவையற்ற செலவுகளைத் தங்கள் வாழ்க்கையில் தவிர்த்து விடுவர். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் செலவு செய்ய வேண்டும் என்னும் மனப்பக்குவம் குழந்தைகளுக்கு வந்துவிட்டால் அவர்கள் வீட்டையும் நாட்டையும் காக்கத் தயராகிவிட்டனர் என்று பொருள்.
செலவுகளுக்குப் பணம் ஒதுக்கீடு செய்தல்
பிள்ளைகளிடம் அவர்களுக்குத் தேவையான செலவுக்குப் பணம் கொடுத்து அதனை அவர்கள் எவ்வாறு செலவு செய்கின்றனர் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பத்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையும், பத்திலிருந்து பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறையும், டீன் ஏஜ் வயதினருக்கு மாதம் ஒரு முறையும் என ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களின் செலவுகளுக்காகக் கொடுக்க வேண்டும். எந்தச் சமயத்திலும் அவர்களின் தேவைக்கு அதிகமான தொகையைக் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர்களுடைய செலவுக்கெனப் பணத்தைக் கொடுப்பதன் மூலம், கையில் இருக்கின்ற பணத்துக்கு ஏற்பத் தங்களுடைய தேவைகளைப் பூர்த்திச் செய்யவும், சிக்கனமாகச் செலவு செய்து மீதிப் பணத்தைச் சேமித்து வைக்கக் கற்றுக் கொள்வதற்கும் சிறு பருவத்திலிருந்தே அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
வங்கியின் அடிப்படைச் செயல்பாடுகளைக் கற்றுக் கொடுத்தல்
பெற்றோர்கள் தங்களுடைய பயன்பாட்டுக்காக வங்கிகளுக்குச் செல்லும்பொழுது குழந்தைகளையும் அழைத்துச் செல்ல வேண்டும். வங்கிகளில் பணத்தை எவ்வாறு செலுத்துவது, தேவையான பணத்தை எவ்வாறு எடுப்பது, அதற்குரிய படிவங்களை எவ்வாறு பூர்த்திச் செய்வது, காசோலைகளைக் கையாள்வது எப்படிப் போன்ற பல விசயங்களை நேரடியாகப் பார்த்துக் கற்றுக் கொள்ளக் குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைக்கும். ஏடிஎம் மையங்களுக்கு அழைத்துச் சென்றும் அதனுடைய நடைமுறைகளைக் கற்றுக் கொடுக்கலாம்.
பள்ளிப் பாடங்களோடு சேர்ந்து பணம் மற்றும் பொருளாதாரம் குறித்த நடைமுறை கல்வியையும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் பணத்தைச் சம்பாதிக்க எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதைக் குழந்தைகள் அறிய வேண்டும். பெற்றோர்களின் கிரடிட் அல்லது டெபிட் கார்டைத் தேய்த்தால் பணம் வந்து கொட்டும் என்கின்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்துவிடக் கூடாது. பணம் வந்து சேர்வதற்கு உரிய நியாயமான, நேர்மையான வழிமுறைகளைக் குழந்தைகளுக்கு உணர்த்துவதன் மூலம் உழைப்புக்கும் ஊதியத்திற்கும் உள்ள நேரடியான தொடர்பை அவர்கள் புரிந்து கொள்வர். குழந்தைப் பருவத்திலேயே பணத்தின் மதிப்பையும் அதனை முறையான வழிகளில் சம்பாதிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து விட்டால் அவர்களுடைய இளமைப் பருவம் ஒளிமயமானதாக மாறிவிடும். குழந்தைகளாக இருக்கும் போதே பணத்தின் மதிப்பு தெரிந்துவிட்டால், அவர்களுடைய இளமைப் பருவத்தில், உழைப்பு, சிக்கனம், சேமிப்பு, முதலீடு ஆகியன பற்றிய சிந்தனைகள் இதயத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுவிடும். முறையாகச் சம்பாதித்து, தேவையானவற்றுக்குச் செலவு செய்து, எதிர்காலத்தை எண்ணிச் சேமிக்கும் பழக்கமும் அவர்களின் இரத்தத்தில் ஊறிப்போய்விடும்.
மனப்பக்குவம், துணைநிற்கும்
சிறு வயதில் பணம் குறித்து ஏற்பட்ட மனப்பக்குவம் பெரியவர்களாகும் போது அவர்களுக்குத் துணைநிற்கும். சேமிப்புத் தொகையைப் பங்குவர்த்தகம், கடன் பத்திரம், பரஸ்பர நலநிதியம் போன்ற போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தைப் பன்மடங்கு பெருக்குவதற்குரிய நிதிசார் மேலாண்மை அறிவை வளர்த்துக் கொள்ள அவர்கள் கற்ற பாலபாடம் உதவும். பணச் சிக்கல் இல்லாமல் மனம் முழுவதும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை நடத்த முடியும். ஆம், இளமையில் விழித்துக் கொண்டால் முதுமையில் கவலையில்லை !