ஒரு காலத்தில், படித்தவர்களுக்கும் வணிகவியல் அறிவு மிக்கவர்களுக்கும் மட்டுமே செந்தாக இருந்த பங்கு வணிகச் சந்தை, தற்போது, பங்கு வர்த்தகத்தில் ஆர்வமும் முதலீட்டைப் பெருக்க வேண்டும் என்கின்ற ஆசையும் உள்ள அனைவருக்கும் சொந்தமான வணிகச் சந்தையாக மாறியுள்ளது. நாம் வாங்கி வைத்திருக்கும் பங்குகளை, சந்தை நிலவரம் மற்றும் நிறுவனங்களின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றைச் சரியாகக் கணித்து மேலாண்மை செய்ய வேண்டும். பங்கு வர்த்தகம் என்பது, நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கும் தன்மையுடையது.
பங்குச் சந்தை நிலவரங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதன் மூலம்தான் நமக்குச் சாதகமான முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுக்க முடியும். இப்படியாக, நம்முடைய பங்கு வர்த்தகத்தை இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற வேண்டும் என்றால் இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று, அதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டும், இரண்டாவதாகப் பங்கு வர்த்தகம் தொடர்பான அறிவைப் பெருக்க வேண்டும். எதற்கு வீண் வம்பு ? நம்முடைய பங்குவணிகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வேறு யாரிடமாவது விட்டுவிட்டால் ? ஐடியாதான்... ஆனா அது நல்லதா .. கெட்டதான்னு யோசித்துத்தான் சொல்ல முடியும். யோசிக்கலாமா?
பங்கு வணிகத் தொழில்முறை மேலாண்மையாளர்கள்
பங்குவணிகத்தை மேலாண்மை செய்ய அதற்கெனத் தனியான தொழிற்திறன் மிக்க நபர்களும், நிறுவனங்களும், ஆலோசகர்களும் உள்ளனர். இத்தகைய ஆலோசகர்களும், நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளரின் பொருளாதார நிலை அவர்களுடைய முதலீட்டுத் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப அவர்க்குப் பங்குகளை வாங்கவும் விற்கவும் உதவுகின்றன. வாடிக்கையாளரிடம் உள்ள பங்குகள், கடன் பத்திரங்கள், அந்நியச் செலவானி நிதியங்கள், உறுதிப் பத்திரங்கள், பரஸ்பர நிதியங்கள் போனவற்றை வகைப்படுத்தி அதனை முறையாக நிர்வகிக்க முன்வருகின்றன.
நன்மைகள்
1) நம்முடைய பங்குவணிகத்தைத் திறன்மிக்க நபர் அல்லது நிறுவனம் நிர்வகிக்கும் பொழுது நமக்கு நேரம் மிச்சமாகிறது.
2) பங்குவர்த்தகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு இது மிகப்பெரும் துணையாக அமையும்.
3) பங்குவர்த்தகத்தில் திறன் பெற்றவர்கள் நம்முடைய பங்குகளை நிர்வகிக்கும் பொழுது நஷ்டம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
4) நம்முடைய பங்குச்சந்தை நடவடிக்கைகள் தொடர்பாக முறையான அடையாளத் தொகுப்பினை உருவாக்க முடியும்.
5) முதுமை மற்றும் இயலாமையால் தவிக்கும் மூத்த குடிமக்களுக்கு இத்தகைய வசதி மிகவும் உறுதுணையாக இருக்கும்.
6) புதியதாகப் பங்குவர்த்தகத்தில் நுழைபவர்களுக்கு, தொழிற்திறன் மிக்க ஆலோசகர்களின் வழிகாட்டுதல்கள் பங்குவர்த்தகம் தொடர்பான புரிதல்களை அதிகப்படுத்த உதவியாக இருக்கும்.
7) எப்பொழுது முதலீடு செய்யலாம், எங்கு முதலீடு செய்யலாம், எவ்வளவு முதலீடு என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க இத்தகைய ஆலோசகர்களும், ஆலோசனைகளும் கட்டாயம் தேவையாக உள்ளன.
தீமைகள்
1) நம்முடைய பங்கு வணிகம் தொடர்பான தகவல்களை மூன்றாம் நபர் நிர்வகிப்பது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.
2) நம்முடைய நம்பிக்கைக்கு உரிய ஆலோசகர் கிடைப்பது அரிது.
3) தனியாக ஆலோசகர்களை நியமிப்பது நமக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தும்.
4) தவறான ஆலோசனைகள் நமக்கு இழப்புகளை ஏற்படுத்தும்.
சிறிய அளவில் முதலீடு செய்பவர்களுக்கு இது பொருத்தமானது அல்ல.
யாரெல்லாம் நம்முடைய பங்குகளை நிர்வகிக்க முடியும் ?
நிதி மேலாளர்கள், பங்கு வர்த்தக ஆலோசகர்கள் மற்றும் சில வங்கிகள் கூடப் பங்கு வணிகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகின்றன. பொதுவாக மிக அதிக அளவில் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குத்தான் இவர்களுடைய சேவைகள் பொருத்தமானதாக இருக்கும்.
உங்களாலும் முடியும்
நமக்குப் பங்கு வணிகம் தொடர்பான நுட்பங்கள் தெரியாவிட்டாலும் நம்மாலும் பங்குவணிகத்தைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும். பங்குச் சந்தையில் நுழையும் பொழுது, ஆரம்பத்தில் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். பலவேறுவகையான பங்கு வணிகத்தில் பரவலாக முதலீடு செய்யும் நிதித்திடம்தான் மியூச்சுவல் ஃபண்ட் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் பல வகைகள் உள்ளன. சிறு நிறுவன முதலீட்டுத் திட்டங்கள், நடுத்தர நிறுவன முதலீட்டுத் திட்டங்கள், பெரும் நிறுவன முதலீட்டுத் திட்டங்கள் எனப் பல வகைகள் உள்ளன.
ஒரு நிறுவனப் பங்கு ஒன்றின் தற்போதைய விலை, அக்குறிப்பிட விலையில் விற்பனைக்குக் காத்திருக்கும் அந்நிறுவனப் பங்குகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டையும் பெருக்கி வரும் தொகையைப் பொறுத்து அந்நிறுவனம் சிறு நிறுவனம், நடு்தர நிறுவனம், பெரும் நிறுவனம் என வகைப்படுத்தப்படுகிறது. நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் சிறு நிறுவனத் திட்டங்களில் முதலீடு செய்வது அபாயமானது. பெரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது நடுத்தரப் பங்கு முதலீட்டுத் திட்டங்களைவிடச் சிறந்தது. மிகப்பெரும் தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு வேய்வதற்குத் தயக்கமாக இருந்தால் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (SIP) வழியாக முதலீடு செய்வது நல்லது. இம்முறையில் உங்களுடைய முதலீடு பகுதி பகுதியாகத் தவணை முறையில் அமையும்.
முடிவாக அறிவிப்பது என்னவென்றால்?
பங்கு வணிகத்தில் திறன்பெற்ற தகுந்த மேலாளர்களின் கீழ் உங்களுடைய பங்கு வணிகத்தை நிர்வகிப்பது நல்லதுதான். இருந்தாலும், தகுந்த அனுபவமும் முறையான பயிற்சியும் பெற்று நம்முடைய பங்கு வணிகத்தை நாமே நிர்வகிப்பதுதான் மிகச்சிறந்ததாக அமையும்.