பண்டமாற்று முறைக்கு முடிவு கட்டிவிட்டுப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் கண்டுபிடிக்கப்பட்டபோது, கடனும் கூடவே வந்து விட்டது.பணத்தைப் பயன்படுத்தும் மனிதனே நினைத்தாலும் அதன் தேவையை முன் அனுமானித்துவிட முடியாது. கால நேரம் இல்லாமல் கையைக் கடிக்கவும், பையைக் காலி செய்யவும் கூடிய காரணியாக இருக்கிறது கடன்.
மான அவமானங்களையும், உயிரையும் காவு வாங்கும் கந்து வட்டியிலிருந்து தப்பிக்க, தனி நபர் கடனை வாங்க மக்கள் வங்கிகளை அணுகத் தொடங்கி விட்டார்கள். கடனுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன், நீங்கள் இவற்றைக் கவனிக்கத் தவறி விட்டால், கந்துவட்டி ரவுடியை விட வட்டி விகிதங்களும், தண்டக்கட்டங்களும் உங்களை வாட்டி வதைத்து விடும்.
கடன் அறிக்கையைப் படியுங்கள்
கடன் கேட்டு விண்ணப்பம் செய்வதற்காக வங்கிப் படியேறுவதற்கு முன்பு உங்கள் தகுதியை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இதற்காக இலவச மாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்துப் பாருங்கள். கடனை திருப்பிச் செலுத்த இயலாத ஏழையையோ, வருமானம் இன்றி இருப்பவரையோ வங்கிகள் ஒருபோதும் விரும்புவதும் இல்லை.வரவேற்பதும் இல்லை. ஒவ்வொரு மாதமும் கிரிடிட் ஸ்கோர் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனைக் காரணம் காட்டி உங்கள் விண்ணப்பங்கள் கொடுத்த மாத்திரத்தில் குப்பைக்குப் போகவும் வாய்ப்பு உண்டு
வட்டி விகிதமும், கால அளவும்
உத்தரவாதமுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்டவை போன்று தனி நபர் கடன்கள் வங்கிகள் கருதுவது கிடையாது. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. ஏனென்றால் வங்கிக் கடன் பதிவேடுகளில் தனிநபர் கடன்கள்தான் வராக்கடன்களாக உயர்ந்துள்ளதாகக் கூறுகிறது. ஆகையால் கடன்களின் மீது 11 விழுக்காடு முதல் 16 விழுக்காடு வரை வட்டியை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.நீண்ட கால மற்றும் குறுகிய காலக் கடன்கள் உங்கள் தவணையைத் தீர்மானிக்கும் முக்கியக்காரணியாக உள்ளது. நல்ல கிரீடிட் ஸ்கோர் கவர்ச்சியான வட்டியை பெற்றுத்தரும்
வரிசை கட்டும் கட்டணம்
கடன் தொகையைப் பொறுத்து வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் சரக்கு மற்றும் சேவை வரி போலக் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், ஒருமுறை மற்றும் அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குதற்கு முன்பு கட்டாயம் நீங்கள் கவனித்தாக வேண்டும். இல்லையென்றால் கடன்தொகையில் ஒரு சிறு தொகையை நீங்கள் இழக்க வேண்டி வரும்
தண்டனை கட்டணம்
தவணைக்காலம் தவறித் தாமதமாகப் பணம் கட்டுபவர்கள், அதிக விலை கொடுக்க வேண்டி வரும். நிதி பற்றாக்குறையால் தவணை சரியான நேரத்தில் செலுத்தாமல் நிராகரித்த காரணத் துக்காகத் தண்டத்தொகையை விதிக்க நேரிடும்.இது 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயரும்போது நெருக்கடி அதிகரிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் கடனுக்காகக் கைநீட்டுங்கள்
வட்டி எகிறலாம்- யோசியுங்கள்
நீங்கள் பெரிய இடத்துப் பிள்ளையாக இருக்கலாம். இருந்தாலும் அவசரத் தேவைக்காகத் தனிநபர் கடனை வாங்கிவிட்டீர்கள். இப்போது கடனை செலுத்தவேண்டும் என்று பாடாய்ப்படுத்தும் மனசைக் கொண்ட நல்லவரா நீங்கள். பரவாயில்லை. வங்கி நடைமுறையை ஆராய அதிகாரியை அணுகுங்கள். முன்கூடியே கடனைச் செலுத்தும்போது வட்டி விகிதத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளும். கடனை திரும்பச் செலுத்தக்கூட வட்டி போடுவார்களாம்.