அவரசகால நிதி என்பது எதிர்காலத்தில் நடைபெறும் எதிர்பாரா நிகழ்வுகளின் போது உதவும் நிதி தொகுப்பு கணக்கு ஆகும். இந்த எதிர்பாரா நிகழ்வு என்பது வேலை இழப்பது, வீட்டில் முக்கிய மறுசீரமைப்பு பணி, ஆபத்தான மருத்துவப் பிரச்சனை, வருவாய் தாமதம், முக்கியக் குடும்ப உறுப்பினரின் மறைவு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
அவசரகால நிதி
அவசரகால நிதி என்பது உங்களின் கடினமான நேரங்களிலோ அல்லது எப்போதெல்லாம் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகின்றதோ அப்போது உதவும் ஒரு வகை நிதி ஆகும். எதிர்பாராத சூழ்நிலையில் உதவும் ஒரு கூடுதல் சேமிப்பாகவே இந்த நிதி பார்க்கப்படுகிறது. இது எளிதில் பணமாக மாற்றக்கூடிய (Liquid Fund) ஒரு வகைச் சேமிப்பாகும்.
அவசரகாலச் சூழ்நிலை அல்லது எதிர்பாரா சூழ்நிலை
உங்களுக்கு நேரக்கூடிய அவசரகாலச் சூழ்நிலை அல்லது எதிர்பாரா சூழ்நிலை என்பது குறுகிய கால ஒன்றாகவோ அல்லது நீண்ட கால ஒன்றாகவோ இருக்கலாம். நீண்ட காலத்தைக் காட்டிலும் குறுகிய கால அவசர சூழ்நிலையை எளிதில் கையாள முடியும்.
தொழில் நிறுவனங்களுக்கு, அதிலும் குறிப்பாகச் சிறுகுறு நிறுவனங்களுக்கு அவசரகால நிதி என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இதன் மூலம் தொழிலின் முக்கியத்தேவையான பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்.
முக்கியத்துவம்
இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களின் பணத்தைச் சேமித்து நடுத்தர அல்லது நீண்ட கால நிதிகளில் முதலீடு செய்கிறார்களே தவிர இந்த அவசரகால நிதிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்தியாவில் நடக்கும் இந்தப் பொதுவான விசயங்கள் வெளிப்படுத்துவது என்னவென்றால், மக்கள் தாங்கள் சேமித்த பணத்தைப் பங்குகள், பரஸ்பர நிதி, பத்திரங்கள், வங்கிகள்,தங்கம் மற்றும் தபால்நிலைய திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
எதிர்காலத்தில் நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளை எதிர்கொள்ள வசதியாக முதலீட்டாளர்கள் அவசரகால நிதியை உருவாக்கிப் பராமரித்து வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அவசரகால நிதியின் நன்மைகள்:
எதிர்பாரா செலவுகளைச் சமாளிக்கக் கடன் அல்லது வேறொருவரின் சொந்த பணத்தைச் சார்ந்திருக்காமல் இருக்க அவசரகால நிதி உதவும்.
ஒருவர் மட்டுமே குடும்பத்தைத் தாங்கி பிடிப்பவர் என்றால், எதிர்பாராமல் வேலை இழக்கும் சமயத்தில் இது கைகொடுக்கும்.
அவசரகால மருத்துவப் பிரச்சினைகள் ஏற்படும் போது இந்த நிதி பயன்படுத்தலாம்.
சொந்த தொழில்முனைவோராக இருந்தால், குறிப்பிட்ட அளவு அவசரகால நிதியைச் சேமிப்பது கட்டாயம்.
வீடு மறுசீரமைப்பு, வாகன பழுதுபார்த்தல் போன்ற சூழ்நிலைகளில் இது கைகொடுக்கும்.
வீடு வாங்குதல் அல்லது தொழில் துவங்குதல் போன்றவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் போது, ஏதேனும் அவசர செலவு வந்து அதைத் தடுத்துவிடாமல் இருக்க இந்த அவசரகால நிதி உதவும்.
நிறுவனங்கள் தங்கள் தொழில் திட்டத்தை வகுக்கும் போது அது அவசரகால நிதியையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். இந்த நிதி எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
தொழிலில் நெருக்கடி என்பது பின்வரும் பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்.
பொருளாதார மந்தநிலை
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தையின் வீழ்ச்சி
நிலையில்லா சந்தை
சொந்த காரணங்கள்
அவசர மருத்துவப் பிரச்சனை
இயற்கை பேரிடர் மற்றும் பல
அவசரகால நிதியை பராமரிப்பது எப்படி?
நமது சொந்த வங்கிக்கணக்குகளைப் போலவே அனைவரும் வருமான வரம்புகளைப் பொருட்படுத்தாமல், அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய தனி அவசரகாலக் கணக்கை பராமரிக்கலாம். முக்கிய விதி என்றவென்றால், இதில் உள்ள வைப்புநிதியை அவசர காரணங்களுக்கு இன்றி வேறு எதற்குப் பயன்படுத்தக்கூடாது.
சேமிப்பு கணக்கு
சேமிப்புக் கணக்களில் இந்த அவசரகால நிதியை போடுவதன் மூலம், மற்ற திட்டங்களைக் காட்டிலும் தேவைப்படும் போது எல்லாம் எளிதாகப் பணத்தை எடுக்கலாம். சேமிப்புக் கணக்குகளுக்கு இந்தியாவில் உள்ள எல்லா வங்கிகளும் 4% வட்டி தருவதால் , இந்தச் சேமிப்பின் மூலம் வட்டிவருவாயும் உள்ளது.
நிரந்திர வைப்புநிதி
நிரந்திர வைப்புநிதியாக இந்த அவசரகால நிதியை முதலீடு செய்தால், அவசர காலத்தில் முதிர்ச்சி காலத்திற்கு முன்பே பணம் எடுப்பதால் அபராதம் விதிக்கப்படும்.
மியூச்சுவல் பண்ட்
பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் முதலீடு செய்வதும் சற்று ஆபத்தானதே. ஏனெனில் சந்தை நிலவரத்தை பொறுத்தே முதலீட்டின் மீது வருமானம் கிடைக்கும்.
விருப்பம்
இந்த அவசரகால நிதியில் எவ்வளவு பணத்தைப் பராமரிக்க வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஏனெனில் இது அவர்களின் சேமிப்பை பொறுத்தது. மூன்று அல்லது நான்கு மாத சம்பளத்தைச் சேமித்து அதை அவசரகால நிதியில் சேரத்து பராமரித்து வருவது நல்லது.