பங்குச் சந்தை என்பதே ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பங்குச் சந்தையில் நிகழும் ஒவ்வொரு வகையான மாற்றங்களுக்கும் ஒரு பெயர் உண்டு. "Price Correction" என்பதும் பங்குச் சந்தையில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு கலைச்சொல். இதனைத் தமிழில் "விலை மாற்றம்" அல்லது "விலை திருத்தம்" என அழைக்கலாம். மிக உயர்ந்த நிலையில் இருந்த பங்குகளின் விலையும், பங்குச் சந்தை குறியீட்டு எண்ணும் திடீரென வீழ்ச்சியைச் சந்திக்கும் நிகழ்வினை "விலை மாற்றம்" என அழைக்கிறோம். முதலீட்டாளர்கள் இலாபத்தை எதிர்பார்த்து அதிகமான எண்ணிக்கையில் பங்குகளை வாங்கிக் குவிக்கையில் பங்குச் சந்தையில் விலையேற்றம் ஏற்படுகிறது. அந்த முதலீட்டாளர்கள், தங்களுடைய பங்குகளை விற்றுப் பணமாக மாற்ற முயலும் பொழுது பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்படுகிறது. இதுதான் "விலை மாற்ற" நிகழ்வுக்குக் காரணமாக அமைகிறது. இப்படியான சூழ்நிலையில், பங்குச் சந்தைகள், ஒரு தற்காலிகமான உயர்வுக்குப் பின்னால் 10% அல்லது அதற்கும் மேலான விலை வீழ்ச்சியைச் சந்திக்கும்.
விலை மாற்றத்திற்கான காரணம்
பங்குகளின் மதிப்பு எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் குறிப்பிடத் தகுந்த காரணங்கள் ஏதுமின்றித் திடீரென உயர்வைச் சந்திக்கும். இந்த உயர்வு சில நாட்கள் மட்டும் நீடிக்கும். முதலீட்டாளர்களின் மனநிலைதான் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாகும்.
இலாபத்தை எதிர்பார்த்து பங்குகளை வாங்கிக் குவித்தல்
மிக அதிகமான இலாபம் கிடைக்கக் கூடிய சூழல் பங்குச் சந்தையில் நிலவுகிறது என முதலீட்டாளர்கள் நினைக்கும் பொழுது, அவர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்குகின்றனர். இதன் காரணமாகப் பங்குகளின் விலை உயர்கிறது. பங்குகளின் விலை உயர்வால் உற்சாகமடையும் முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாகப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ.80 என வைத்துக் கொள்வோம். இந்நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்கும் பொழுது அதனுடைய விலை ரூ.100 என உயர்கிறது. ஒரு குறிப்பிட்ட விலைக்கும் மேல் இந்நிறுவனத்தின் பங்குகளின் உயரும் பொழுது முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதை நிறுத்துகின்றனர். இங்குதான் "விலை மாற்றத்திற்கான" இரண்டாவது காரணம் தோன்றுகிறது.
இலாபத்தை அறுவடை செய்தல்
தாங்கள் வாங்கிய பங்குகளின் விலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயராது எனத் தெரிந்தவுடன் முதலீட்டாளர்கள் வாங்குவதை நிறுத்தி விட்டு, வாங்கிய பங்குகளை விற்று இலாபம் ஈட்ட நினைக்கின்றனர். முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளை விற்கத் தொடங்கும் பொழுது பங்குகளின் விலையில் வீழ்ச்சி ஏற்படுகிறது. தாங்கள் 80 ரூபாய் கொடுத்து வாங்கிய பங்குகளை 100 ரூபாய்க்கு விற்று ஒவ்வொரு பங்குகளின் மீதும் 20 ரூபாய் இலாபம் சம்பாதிக்கின்றனர். பங்குகளின் விலையில் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சி ஏற்படும்வரை இந்நிலை தொடர்கிறது.
விலை மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி?
பங்குச் சந்தையில் ஏற்படும் இந்த விலைமாற்றம் அல்லது விலை வீழ்ச்சி பங்கு முதலீட்டாளர்களின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கும். பங்குச் சந்தையில் புதியதாக நுழைந்த பல முதலீட்டாளர்கள், நஷ்டத்திற்குப் பயந்து பங்குச் சந்தையை விட்டே வெளியேறிவிடுவர். இத்தகைய வீழ்ச்சியைப் பங்குச் சந்தை தானாகவே சரி செய்து கொள்ள இயலும். எனவே, பங்குச் சந்தையை விட்டே வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.
விலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு சில மாதங்களில் சரியாகிவிடும். விலை மாற்றங்கள் இயல்பானவை என்பதையும், முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்து இது நிகழக்கூடியது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். விலை மாற்றத்தின் பொழுது உங்களுடைய பங்குகளை விற்பனை செய்தால், அதே பங்குகளைக் குறைந்த விலையில் மீண்டும் உங்களால் வாங்க இயலாத நிலை ஏற்படும்.
இதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
இத்தகைய விலை மாற்றத்தின் போது உங்களுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கென்றே ஒரு சூப்பரான ஐடியா உள்ளது. உங்களுடைய முதலீடுகளை ஏதேனும் ஒரு நிறுவனப் பங்குகளில் மட்டும் குவிக்காமல், பல்வேறு வகையான நிறுவனப் பங்குகளில் பிரித்து உங்களுடைய முதலீடுகளைச் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் முதலீடுகளைக் குவிக்காமல் பல்வேறு வகைப்பட்ட பங்குகளில் உங்களுடைய முதலீடுகளைச் செய்வதனால் விலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். பங்குகளில் மட்டும் அல்லாமல், பத்திரங்கள், கமாடிட்டி போன்ற பிறவற்றிலும் முதலீடு செய்வதன் மூலம் ஒன்றில் இழப்பு ஏற்பட்டாலும் மற்றொன்றின் மூலம் தப்பித்துக் கொள்ளலாம்.
பங்குச் சந்தைக்குப் புதியவராக இருந்தால், தகுந்த நிதி ஆலோசகரிடமிருந்து அறிவுரைகளைப் பெற்று அதனடிப்படையில் முதலீடு செய்யவும்.