ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பிற்குப் பிறகு வங்கி டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகின்றன. தற்பொழுது வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தத் துவங்கியுள்ளன. இதைப் பயன்படுத்தி நாம் அதிக வருவாய் ஈட்ட இயலும். நாங்கள் இங்கே உங்களுக்காக அதிக வருவாய் தரும் 5 நிரந்தர வைப்பு நிதி திட்டங்களைத் தந்துள்ளோம். இவை அனைத்தும் பாதுகாப்பானது எனினும் இவை அனைத்தும் அதிக வருவாய் விகிதத்தை வழங்குகின்றன
மஹிந்திரா ஃபினான்ஸ்
நீங்கள் மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனத்தின் நிரந்தர வைப்பு நிதிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால், 8.75 சதவீத வட்டி விகிதத்தைப் பெற இயலும். இந்த நிரந்தர வைப்பு நிதி 33 அல்லது 40 மாதங்களில் முதிர்வு பெறுகின்றன.
இந்த நிரந்தர வைப்பு நிதிக்கு AAA தர மதிப்பு கிடைத்துள்ளது. இந்த நிரந்தர வைப்பு நிதியில் நீங்கள் ரூபாய் 5,000 முதலீடு செய்தால், 33 மாதங்களுக்குப் பிறகு உங்களுக்கு ரூ. 6,301 அல்லது 44 மாதங்களுக்குப் பிறகு 6,619 ரூபாய் கிடைக்கும். இதைக் கணக்கிட்டால் உங்களுக்கு 9.71 சதவிகித நிகர வட்டி விகிதம் கிடைக்கும். மேலே குறிப்பிட்டுள்ள வட்டி ஆன்லைன் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆன்லைன் வழிமுறையைப் பயன்படுத்தாவிட்டால், உங்களுக்குக் குறைவான வட்டி விகிதம் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த கால அளவை தேர்வு செய்தால், அதாவது 15 மாதங்களைத் தேர்வு செய்தால், 7.95 சதவீத வட்டியும் 27 மாதங்களைத் தேர்வு செய்தால், 8.50 சதவீத வட்டியும் கிடைக்கும். உயர்ந்த வருவாய் மற்றும் பாதுகாப்பை விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த நிரந்தர வைப்பு நிதியை தேர்வு செய்யுங்கள்.
பஜாஜ் நிதி நிறுவனம்
பஜாஜ் நிதி நிறுவனம் தன்னுடைய 36-60 மாத நிரந்தர வைப்பு நிதிக்கு 8.40% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.35 சதவீத வட்டி கிடைக்கும். இதில் நீங்கள் ரூ 25,000 ஐ குறைந்தபட்சமாக முதலீடு செய்யலாம்.
24 முதல் 35 மாத வைப்பு நிதிக்கு 8.15% வட்டி கிடைக்கின்றது. பிற நிதிகளை ஒப்பிடும் பொழுது இது சற்றுக் குறைவு. இங்கு 12-35 மாத வைப்பு நிதிக்கு 7.60% வட்டி கிடைக்கின்றது.
இந்த வைப்பு நிதிக்குக் கிரேசில் FAAA தரச் சான்று வழங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த நிதியின் பாதுகாப்பு அம்சத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் வைப்பு நிதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், அல்லது நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள அந்த நிறுவனத்தின் 200 கிளைகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
கேடிஎப்டிசி
இது, கேரள அரசு சார்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1, 2 மற்றும் 3 வருட வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டி வழங்குகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் வட்டி அசலுடன் சேர்க்கப் பட்டு விடும். எனவே உங்களுக்கு 3 ஆண்டுக் கால இறுதியில் 9.32 சதவீத வட்டியும், 5 வருட இறுதியில் 9.80 சதவீத வட்டியும் கிடைக்கின்றது.
இந்த நிரந்தர வைப்பு நிதிக்கு கேரள அரசாங்கத்தின் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனவே இது மிகவும் பாதுகாப்பானது.
இதில் 4 மற்றும் 5 ஆண்டு வைப்பு நிதிக்கு, சற்று குறைந்த 8 சதவீத வட்டி கிடைக்கின்றது. மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.25 சதவிகித வட்டி கிடைக்கின்றது. இந்த வைப்புத்தொகை கேரளா அரசால் ஆதரிக்கப்படுகிறது. எனவே இது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
சூர்யோடி ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க்
இது ஒரு சிறிய நிதி வங்கியாகும். இதற்கு ரிசர்வ் வங்கியால் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான வைப்பு நிதிக்கு 8.75 சதவிகித வட்டி விகிதம் கிடைக்கின்றது. 12 முதல் 24 மாத வைப்பு நிதிக்கு 8.50 சதவீத வட்டி விகிதம் கிடைக்கின்றது.
சிறிய நிதி வங்கியால் வழங்கப்படும் அதிக வட்டி விகிதங்களில் இது குறிப்பிடத் தக்கது. இதுவரை சிறிய நிதி வங்கியுடன் தொடர்புடைய வைப்பு நிதிகளுக்கு அபாயம் எதுவும் ஏற்படவில்லை. எனவே இந்த வைப்பு நிதிகளின் பாதுகாப்பு அம்சம் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது கடினம்.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கி 12 முதல் 24 மாதங்களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்குகின்றது. இதனுடைய நிகர வட்டி 7.98 சதவிகிதம் ஆகும். இந்த நிறுவனம் 24 முதல் 36 மாத நிரந்தர வைப்பு நிதிக்கு 7.50 சதவீத வட்டி வழங்குகின்றது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் அதிக வட்டி விகிதங்களை நீங்கள் பெறலாம்.