வருமான வரித்துறையானது பான் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் மார்ச் 31க்குள் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. அப்படி மார்ச் 31, 2023க்குள் இணைக்காவிடில் உங்கள் பான் எண் செயலிழக்கலாம் என தெரிவித்துள்ளது.
இது குறித்து வருமான வரி துறையானது வெளியிட்ட அறிக்கையில், வருமான வரி சட்டம் 1961ன் படி, பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், விலக்கு அளிக்கப்பட்டவர்களை தவிர, மார்ச் 31, 2023-க்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மார்ச் 31 தான் கடைசி
ஒரு வேளை மார்ச் 31-க்குள் ஆதார் பான் இணைப்பு செய்யாவிடில், இணைக்காதவர்களின் பான் எண் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டில் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பலமுறை அறிவிப்பினை வெளியிட்ட வருமான வரி துறையானது, போதிய கால அவகாசமும் கொடுத்தாகிவிட்டது. ஆனால் இதுவரையில் பலரும் இணைக்காமலேயே இருந்து வருகின்றனர்.
யாருக்கெல்லாம் விலக்கு
இணைக்காவிடில் அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவித்தும் கூட, பலரும் இணைக்கவில்லை.
அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் இந்தியர்கள் அல்லாதவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்திய குடிமகன் அல்லாதவர்கள் இந்த இணைப்பில் இருந்து விலக்கு பெற்றவர்கள் ஆவர்.
இன்றே இணைத்திடுங்கள்
என்னவெல்லாம் கட்டாயமோ அது அத்தியாவசியம், தாமதம் செய்யாதீர்கள். இன்றே இணைத்திடுங்கள் என வருமான வரித் துறை சார்பில் அறிவித்துள்ளது.
உங்கள் பான் எண் செயலற்றதாகி விட்டால் உங்களால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. அதேபோல வருமான வரியும் அதிகமாக இருக்கும். மேலும் நிலுவையில் உள்ள வரியை திரும்ப பெற முடியாது. மொத்தத்தில் பான் எண் அவசியம் தேவை என்ற இடங்களில் உங்களால் பயன்படுத்த முடியாது.
வங்கி கணக்கும் தொடங்க முடியாது?
அது மட்டும் அல்ல, நீங்கள் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலும் பான் எண்ணை பயன்படுத்த முடியாது. உங்களால் முழுமையாக KYC-யை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது. இதனால் உங்களால் எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஆக நீங்கள் தனி நபராக இருந்தாலும் சரி, அல்லது நிறுவன பான் கார்டாக இருந்தாலும் சரியாக ஆதார் பான் இணைப்பு செய்வது கட்டாயமாகும்.
SMS மூலம் இணைப்பது?
ஆதார் எண் - பான் எண்னை இணைக்க இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று எஸ்எம்எஸ். இதில் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் இணைக்கலாம்?
ஆன்லைனில் இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்கலாம்.
வலைதளத்தில் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.
இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும்.
இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
நேரடியாகவும் இணைக்கலாம்:
உங்களால் ஆன்லைனிலோ அல்லது எஸ் எம் எஸ் மூலமாகவே இணைக்க முடியாவிட்டால்,நேரிலும் சென்று ஆதாரை இணைக்கலாம். இதற்காக நீங்கள் சேவை மையத்திற்கு சென்று Annexure-I நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதாவது பான் அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கு கட்டணம் உண்டு.