இந்தியாவில் தற்போது அனைத்து இடத்திலும், அனைத்து தரப்பும் ஆதார் கார்டை தான் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டையாக விளங்குகிறது. இந்நிலையில், மத்திய அரசுக்கு மக்கள் ஆதார் அட்டையை மிகவும் எளிதாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல வழிகளை உருவாக்கியுள்ளது.
அப்படி ஆதார் கட்டமைப்பை நிர்வாகம் செய்யும் UIDAI அமைப்பு மக்களுக்கு ஆதார் அட்டையை எளிதாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஆதார் PVC கார்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
UIDAI அமைப்பு
UIDAI அமைப்பின் புதிய அறிவிப்புக்கு பின்பு, இந்தியாவில் தற்போது ஆதார் கார்டை 4 வகையில் பயன்படுத்த முடியும். ஆதார் லெட்டர், ஈஆதார், எம்ஆதார் மற்றும் ஆதார் பிவிசி கார்டு. UIDAI அமைப்புப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது ஆதார் பிவிசி கார்டு பயன்படுத்த எளிதாக இருப்பது மட்டும் அல்லாமல் பல பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளது.
ஆதார் பிவிசி கார்டு
ஆதார் பிவிசி கார்டு என்பது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போலப் பிளாஸ்டிக் அட்டையில் வரும் ஆதார் கார்டு. இது நாள் வரையில் காகிதத்தில் அளிக்கப்பட்டு வந்த ஆதார் தற்போது பிளாஸ்டிக் கார்டு வாயிலாக அளிக்கப்படுகிறது. இந்த ஆதார் பிவிசி கார்டில் QR கோடு பாதுகாப்பு உடன் புகைப்படம் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் இருக்கும் என UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது.
50 ரூபாய் கட்டணம்
விருப்பம் உள்ளர்களும், ஏற்கனவே ஆதார் கார்டு வைத்திருப்பவர்களும் ஆதார் எண், விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடியைப் பயன்படுத்தி uidai.gov.in அல்லது Residence.uidai.gov.in மூலம் ஆதார் PVC கார்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆதார் PVC கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்..
- UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: uidai.gov.in அல்லது resident.uidai.gov.in.
- 'ஆதார் பெறுக (Get Aadhaar)' என்பதன் கீழ் இருக்கும் 'ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் 12 இலக்க ஆதார் எண் (UID) அல்லது 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் (VID) அல்லது 28 இலக்கங்கள் கொண்ட பதிவு ஐடியை உள்ளிடவும்.
- பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிடவும்
- "ஓடிபி" பெறுவதற்குக் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
- ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து உறுதி செய்துக்கொண்டு செக் பாக்ஸ்-ஐ கிளிக் செய்யவும்.
- 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆதார் விவரங்களின் முன்னோட்டம் திரையில் தோன்றும். அவற்றைக் கவனமாகச் சரிபார்க்கவும்.
- 'பணம் செலுத்து (Make payment)' என்பதைக் கிளிக் செய்யவும்.
- பேமெண்ட் செய்வதற்காகப் புதிய புதிய இணையதளத்திற்குச் செல்ல வேண்டும், இப்புதிய பக்கத்தில் தான் உங்கள் பிவிசி கார்டுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- பேமெண்ட் முடிந்த பின்பு ரசீது கிடைக்கும். இதோடு மொபைல் எண்ணுக்குச் சர்வீஸ் ரெக்வெஸ்ட் நம்பர் கிடைக்கும்.
- ஆதார் பிவிசி அட்டையின் ஸ்டேடஸ்-ஐ SRN மூலம் கண்காணிக்க முடியும்.