இன்றைய காலத்தில் வங்கிகளுக்கு சென்று பணப்பரிவர்த்தனை செய்யும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. டிஜிட்டல் பேமெண்ட் தளங்களின் அதிகரிப்பு, ஏடிஎம் வசதி இப்படி பல வழிகள் இருப்பதால் எளிதில் பணம் அன்புவது, பெறுவது போன்றவற்றை செய்து வருகின்றனர். டிஜிட்டல் பேமென்ட் தளங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத பகுதிகளில் மக்கள் ஏடிஎம் இயந்திரங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பணம் எடுப்பதற்கும், பணம் டெபாசிட் செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஏடிஎம் இயந்திரத்தில் 10-க்கும் மேற்பட்ட சேவைகளைப் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏடிஎம் மூலம் கிடைக்கும் பிற சேவைகள் என்னென்ன?: பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்வது, ஒரு பேங்கில் இருந்து இன்னொரு பேங்க் அக்கவுண்டுக்கு பணம் அனுப்புவது, மின்சார கட்டணம், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவது, மொபைல் ரீசார்ஜ் செய்வது, பேலன்ஸ் பார்ப்பது, மினி ஸ்டேட்மென்ட் பார்ப்பது, ஏடிஎம் பின் நம்பரை மாற்றுவது மற்றும் செக் புக் பெறுவது என பல சேவைகளை ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகவே பெறலாம்.

ஆனால் இன்னுமும் இந்த சேவைகளை எல்லாம் ஏடிஎம்-மில் பெற முடியுமா? என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதனால் மக்களுக்கு மட்டுமல்ல வங்கிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்வதை தவிர்த்து ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் என்னென்ன சேவைகளை பெற முடியும் என்பதை வங்கிகள் தான் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உலகின் மிகப்பெரிய ஏடிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான நவ்ரோஸ் தஸ்தூர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் பெரு நகரங்களில் இந்த சேவைகளை மொபைல் போன் மூலமாக செய்து வருகின்றனர். டிஜிட்டல் பேமெண்ட் தளங்களிலேயே ரீசார்ஜ் செய்யும் வசதி, எலக்ட்ரிசிட்டி பில் செலுத்தும் வசதி, முதலீடு செய்யும் வசதி என அனைத்தும் வந்துவிட்டது. ஆனால் டயர் 3 நகரங்கள், சிறிய கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் ஏடிஎம்கள் மூலம் பிற சேவைகளையும் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு கற்றுத் தந்தால் வங்கிக்கும் வருவாய் அதிகரிக்கும்.
என்னதான் மக்கள் பிற சேவைகளை பயன்படுத்தவில்லை என்றாலும் தொடர்ந்து ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் இயங்கி வரும் ஏடிஎம்களின் எண்ணிக்கை 2,65,000. இதில் சுமார் 1 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் அந்தந்த வங்கிக் கிளையின் வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
ஏடிஎம் சேவைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பதால் அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகரித்து வங்கிகளுக்கு வருவாயும் குறைவாகவே கிடைக்கிறது. ஒரு வங்கியின் ஏடிஎம் கார்டை மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் பயன்படுத்தும் போது 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மிக மிக குறைவாக இருப்பதால் ஏடிஎம் மையங்களை சரிவர இயக்குவதிலும் வங்கிகளுக்கு பிரச்சனை இருக்கிறது. எனவே ஏடிஎம் வழங்கும் பிற சேவைகளையும் பயன்படுத்தினால் அது வங்கிகளுக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கும் நல்லது.


Click it and Unblock the Notifications
