தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரசு தரும் 25,000 நிதியுதவியை இளைஞர்கள் பெற முடியும். அது என்ன திட்டம், அதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்.
மத்திய அரசு பணிகளில் அதிக எண்ணிக்கையில் வடமாநிலத்தவர்களே இருக்கிறார்கள், இங்கே தமிழ்நாட்டு இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்க தமிழ்நாட்டு இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு யுபிஎஸ்சி (upsc) தேர்வுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பதை உறுதி செய்ய நிதியுதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2026 சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், நான் முதல்வன் இணையதளம் வழியாக ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, தங்களின் முதன்மைத் தேர்வு தயாரிப்பிற்கான ரூ.25,000 அரசு நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி 2026-ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் (Prelims) தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்கு (Mains) தயாராகி வரும் மாணவர்கள் தங்களின் தேர்வுத் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, தமிழ்நாடு அரசு வழங்கும் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது. இந்த ஊக்கத்தொகையை பெற இன்று (ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையையும், அவர்கள் அகில இந்திய அளவில் பெறும் வெற்றியின் விகிதத்தையும் கணிசமாக அதிகரிக்கும் நோக்கில் ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் போது மாணவர்களுக்கு ஏற்படும் புத்தகச் செலவுகள், பயிற்சி கட்டணங்கள் மற்றும் இதர வாழ்வாதாரச் செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த ஒருமுறை நிதியுதவியாக ரூ.25,000 நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் கண்டிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூர்வீகக் குடிகளாக இருக்க வேண்டும். நடப்பு 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி குடிமைப்பணி (Civil Services) முதல்நிலைத் தேர்வில் பங்கேற்று, முதன்மைத் தேர்வுக்கு (Mains Exam 2026) தகுதி பெற்ற மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்-19.06.2026 , விண்ணப்பிக்கக் கடைசி நாள்- 30.06.2026 ஆகும்.
அதாவது வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்தால் மட்டுமே 25,000 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ 'நான் முதல்வன்' இணையதளம் (https://naanmudhalvan.tn.gov.in/) வாயிலாக மட்டுமே தங்களுடைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். UPSC முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்துப் பயனடையுமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications

