இன்று தமிழகத்தில் கொரோனாவை விட பெரும் ஹாட் டாப்பிக்காக மாறியிருப்பது மின் கட்டணம் பற்றிய செய்தி தான்.
ஏனெனில் மாதாந்திர மின் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டால், வீட்டு மின் உபயோக நுகர்வோர்ருக்கு மின் கட்டணம் குறையும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மின் கட்டண முறை
தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டி வரும் நிலை தான் உள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.
முதல் 200 யூனிட் வரையில் பயன்பாடு
அதெல்லாம் சரி மின் கட்டணம் குறையும் என்று கூறப்படுகிறதே? அதெப்படி? எப்படி குறையும்? வாருங்கள் பார்க்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் 150 யூனிட்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதில் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள 101 - 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 1.5 ரூபாயாகும்.
இந்த அடிப்படையில் 50 யூனிட்களுக்கு 1.5 ரூபாய் என்று கணக்கிட்டால் 75 ரூபாய், அதனுடன் சேர்த்து நிலையான கட்டணம் என 20 ரூபாய் சேர்த்து 95 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
200 – 500 யூனிட் பயன்பாடு
ஒருவர் 400 யூனிட் பயன்படுத்தியிருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 100 யூனிட் இலவசம்
101 - 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் கட்டணம். இதன்படி 200 ரூபாய் வசூலிக்கப்படும்.
201 - 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயாகும். இந்த வகையில் வாடிக்கையாளர் பயன்படுத்தியிருப்பு 400 யூனிட் என்பதால் 201 - 400 யூனிட்களுக்கு கணக்கிட்டால் 600 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
இதில் மொத்த நிலையான கட்டணம் என்பது 30 ரூபாயாகும்.
ஆக மொத்தத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 30+ 200+600 = 830 ரூபாயாகும்.
500 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு
இதே ஒருவர் 520 யூனிட்டுகள் உபயோகித்தால், முதல் 100 யுனிட்டுகள் இலவசம்.
அதற்கு மேல் 101 - 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 3.50 ரூபாயாகும். அப்படிப் பார்த்தால் 101-200 யூனிட்டுகளுக்கு 350 ரூபாயாக கணக்கில் கொள்ளப்படும்.
இதே 201 - 500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 4.60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த வீதத்தில் 300 யூனிட்களுக்கு 1,380 ரூபாய் வசூலிக்கப்படும்.
இதே 500 - 520 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 6.60 ரூபாயாகும். இந்த வீதத்தில் கணக்கிடும்போது 132 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
இதனுடன் நிலையான கட்டணம் 50 ரூபாய். ஆக மொத்தம் ரூ.50 + 350+ 1380+ 132 = 1,912 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
அதிக கட்டணம் செலுத்தும் நிலை
தமிழக அரசின் தற்போதைய மின் கட்டண அணுகுமுறையால் நடுத்தர மக்கள் தான் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் தற்போதுள்ள கொரோனா நெருக்கடி போன்ற நெருக்கடியான நேரங்களில் இன்னும் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். அதோடு இரு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படுவதால் மக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எப்படி கட்டணம் குறையும்?
உதாரணத்திற்கு ஒருவர் இருமாதங்களும் சேர்ந்து 400 யூனிட் பயன்படுத்துகிறார் எனில், அவருக்கு 100 யூனிட் மட்டுமே இலவசமாக கிடைக்கும். மீதம் 300 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதே 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள் எனில் 400 யூனிட்களுக்கு மேல் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த முறையில் கட்டணமும் அதிகம். இதே மாதம் ஒரு முறை கணக்கீடு செய்யும் போது தற்போது 520 யூனிட் பயன்படுத்துவோர், மாதம் ஒரு முறை எனும்போது சராசரியாக 260 யூனிட் பயன்படுத்துவார்கள். இதில் 100 யூனிட் இலவசம் எனும்போது, 160 யூனிட்டுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் நிலை வரும், கட்டணமும் குறையும். இதே இரு மாதங்கள் எனும்போது 420 யூனிட்+ கட்டணமும் அதிகம்.
மின் கட்டண பிரச்சனைக்கு தீர்வு
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் மின்கட்டணத்தை மாதம் தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரப்படுகின்றது. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படிருந்தது. அதன்படி தான், தற்போது தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மக்கள் வரவேற்பு
தமிழக அரசு போல மாதாந்திர கணக்கீடு அமல்படுத்தப்படும் போது, நிச்சயம் மின் கட்டணம் குறைய வாய்ப்புகள் உள்ளது. இதனால் மக்கள் குறைவான கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்படும். இதனால் தான் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.