இந்தியாவில் மருத்துவ செலவுகள் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. சாதாரணமாக ஒரு காய்ச்சல் என்றாலே குறைந்தது 1000 ரூபாய் செலவாகிறது. ஏதேனும் அறுவை சிகிச்சை என்றால் லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. சிறந்த மருத்துவ சிகிச்சை பெற விரும்பினாலும் அந்த சிகிச்சைக்கான பணம் இல்லாததால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய்களுடன் அவதிப்படுகின்றனர்.
திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள் அறுவை சிகிச்சை செலவுகள் பெரும்பாலான குடும்பங்களை கடனாளி ஆக்கி விடுகிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை காக்கவே 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவுகளை இலவசமாக பெறும் ஒரு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் (PMJAY).

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகத்தால் கடந்த 2018 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள நபர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிகளில் எளிதாக விண்ணப்பம் செய்து மருத்துவ காப்பீட்டு அட்டையைப் பெற முடியும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் சேர்த்து இது செயல்படுத்தப்படுகிறது.
தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவச் செலவு வழங்கப்படுகிறது. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் எவ்வித வருமான வரம்பும் இன்றி இந்த மருத்துவக்காப்பீடு முழுமையாகக் கிடைக்கிறது. இந்தியாவின் எந்தவொரு அரசு அல்லது இத்திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் முன்பணம் செலுத்தாமல் இந்த ஒரு அட்டையை காட்டி இலவசமாக சிகிச்சை பெறலாம்.

இந்த திட்டத்தில் சேர மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தனி அலுவலகமே இருக்கிறது. அங்கே அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அதாவது ஆதார் போன்ற ஒரு அடையாளச் சான்று, ரேஷன் கார்டு, வருமான சான்று மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் ஆகியவற்றுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் என சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் PMJAY-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு அல்லது தமிழ்நாட்டின் https://www.cmchistn.com/ சென்று முதலில் உங்கள் மொபைல் எண் மூலம் லாகின் செய்ய வேண்டும். பின்னர் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, தகுதியைச் சரிபார்த்த பின்னர் உங்களுக்கான ஆயுஷ்மான் அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆஃப்லைன் முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மருத்துவ காப்பீடு அட்டைக்கான மையத்திற்கு சென்று அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை சமர்ப்பித்து, வருமான சான்று வழங்கி பயோமெட்ரிக் சரிபார்ப்புடன் பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் விண்ணப்பம் செய்யும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்குள் இருக்க வேண்டும் மற்றும் ரேஷன் கார்டு பெற்றிருக்க வேண்டும். இதுவே 70 வயதுக்கு மேற்பட்ட நபர் என்றால் எந்த ஒரு வருமான வரம்பும் இல்லை. அவர்களுக்கு தானாகவே 5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும். அதே மையத்தில் அவர்களுக்கு தனியாக விண்ணப்பம் செய்து கார்டு பெற்று கொள்ளலாம். மருத்துவமனைகளில் இந்த கார்டினை காட்டினாலே அதை ஏற்பார்களா இல்லையா என்பதை சொல்லிவிடுவார்கள்.


Click it and Unblock the Notifications

