பொதுவாக அரசு பத்திரங்களை Government securities அல்லது G-Sec என அழைப்பது வழக்கம், ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு நாட்டு வளர்ச்சி அல்லது மாநில வளர்ச்சி திட்டத்திற்குத் தேவையான செலவுகளைப் பூர்த்தி செய்ய இந்தப் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் திரட்டும்.
இந்தப் பத்திரத்தை நிறுவன முதலீட்டாளர்கள், வங்கி அமைப்புகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள், பெரும் முதலீட்டாளர்கள், தனிநபர் முதலீட்டாளர்கள் என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து பெறலாம்.
தனிநபர்களுக்கு லாபம்
இந்தப் பத்திரத்தை அடமானமாகவோ அல்லது கடனுக்கு உத்தரவாதமாக வைத்து வங்கிகளில் கடன் பெற முடியும் என்பதால் தனிநபர்களுக்கு இதில் முதலீடு செய்து நன்மை அடையலாம்.
எத்தனை வகை உள்ளது..?
பொதுவாக அரசு பத்திரத்தில் 3 வகை உள்ளது
Treasury Bills - ஒன்றிய அரசு வெளியிடும் ஒரு வருடத்திற்குக் குறைவாக முதிர்வு காலம் கொண்ட குறுகிய கால அரசு பத்திரமாகும்.
அரசு பத்திரங்கள் (G-sec) - நீண்ட காலப் பத்திரங்களைத் தான் அரசு பத்திரங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த வகைப் பத்திரங்கள் 5 முதல் 50 வருடம் வரையில் முதிர்வு காலம் இருக்கும்.
ஸ்டேட் டெவலப்மெண்ட் லோன் (SDL) - மாநில அரசு வெளியிடும் அரசு பத்திரம் தான் இந்த ஸ்டேட் டெவலப்மெண்ட் லோன். இதன் முதிர்வு காலத்தை மாநில அரசு தான் முடிவு செய்யும்.
ரீடைல் முதலீட்டாளர்கள்
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் நிதி நிலை மற்றும் வங்கியின் வாராக் கடன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்களுக்குப் புதிய முதலீட்டுத் தளம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என இலக்குடன் அரசு பத்திரத்தில் ரீடைல் முதலீட்டாளர்களையும் முதலீடு செய்ய அனுமதித்துள்ளது.
ப்ரைமரி மற்றும் செக்கண்டரி சந்தை
ரீடைல் முதலீட்டாளர்கள் கில்ட் கணக்கைத் துவங்கி அதன் மூலம் பொதுத்துறை வங்கிகள், நாணய கொள்கை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அரசின் ப்ரைமரி மற்றும் செக்கண்டரி சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
கில்ட் கணக்கு என்றால் என்ன..?
வங்கி கணக்கை போலவே தான் இந்தக் கில்ட் கணக்கு, பொதுவாக வங்கி கணக்கில் பணமாகக் கிரெடிட் மற்றும் டெபிட் செய்யப்படும். ஆனால் கில்ட் கணக்கில் அரசு பத்திரங்கள் அல்லது Treasury Bill வாயிலாகக் கிரெடிட் மற்றும் டெபிட் செய்யப்படும். தனிநபருக்கான கில்ட் கணக்கு வழிமுறைகளை விரைவில் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
ஏல முறை விற்பனை
ரிசர்வ் வங்கி ஏல முறையில் இந்த அரசு பத்திரங்களை விற்பனை செய்யும் நிலையில், நிறுவன முதலீட்டாளர்கள், வங்கி அமைப்புகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள், பெரும் முதலீட்டாளர்கள் போட்டி அடிப்படையிலும், ரீடைல் முதலீட்டாளர்கள் அதாவது தனிநபர் முதலீட்டாளர்கள் போட்டி அல்லாத முறையில் முதலீடு செய்யவும் வழிவகைச் செய்துள்ளது.