இன்றைய உலகில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. பில் செலுத்துவது, ஷாப்பிங் செய்வது, உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்கினால் பணம் செலுத்துவது என எல்லா சூழ்நிலைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மக்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் அந்த அளவு வசதி இல்லாமல் உள்ளது. இன்னமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் மக்கள் குறைவாகவே உள்ளனர்.
பாரம்பரியமாக மக்கள் வங்கிகள் அல்லது ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுப்பார்கள். ஆனால் இப்போது மிகவும் வசதியான அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் கார்டைப் பயன்படுத்தியே எளிதில் பணம் எடுக்கலாம். இந்திய தேசியக்கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய ஆதார் இணைக்கப்பட்ட கட்டண (AEPS) முறையைப் பயன்படுத்தி எளிதில் ஆதார் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

AEPS பயனர்கள் தங்கள் ஆதார் கார்டு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி பணம் எடுத்தல், பேலன்ஸ் விவரங்களைத் தெரிந்து கொள்ளுதல் மற்றும் நிதி பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த சேவைகளை மைக்ரோ ஏடிஎம்-கள் மற்றும் பிற வங்கி முகவர்கள் மூலம் பெறலாம்.
ஒரு மாதத்திற்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்?: AEPS முறையைப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கு வரம்புகள் உள்ளன. பொதுவாக ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம். சில வங்கிகள் பாதுகாப்பு அம்சம் காரணமாக AEPS சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பணம் எடுப்பதற்கு இந்த சேவையை பயன்படுத்த உங்கள் வங்கி கணக்குடன், உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்.
உங்கள் ஆதார் கார்டைப் பயன்படுத்தி எளிதாக பணத்தை எடுப்பது எப்படி?:
ஸ்டெப் 1: அருகிலுள்ள வங்கி முகவர் அல்லது மைக்ரோ ஏடிஎம் சேவை மையத்தைப் பார்வையிடவும். பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது தபால் நிலையங்களில் இந்தச் சேவைகள் காணப்படும்.
ஸ்டெப் 2: உங்கள் 12 இலக்க ஆதார் நம்பரை முகவரிடம் கொடுங்கள்.
ஸ்டெப் 3: உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து கைரேகை அல்லது கருவிழி ஸ்கேனிங்கைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வழங்கவும்.
ஸ்டெப் 4: நீங்கள் எடுக்க விரும்பும் பணத் தொகையைக் குறிப்பிடவும்.
ஸ்டெப் 5: அங்கீகரிக்கப்பட்டதும், நீங்கள் பணமும் பரிவர்த்தனைக்கான ரசீதும் பெறுவீர்கள்.
மேலும் கணினி உங்களுக்கு பல்வேறு விருப்பங்கள் காண்பிக்கும். பணம் திரும்பப் பெறலாம், பணம் ட்ரான்ஸ்பர் செய்யலாம். எனவே உங்களுக்கு எந்த விருப்பம் தேவை என்பதை முகவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின் முகவர் உங்களுக்கு பணத்தை எடுத்து தருவார். ஆனால் கண்டிப்பாக இதை வைத்து உங்களால் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications