வருமானவரித்துறை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இவ்வாறு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கு என எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது வருமான வரி துறை.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உங்களுடைய பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து உங்களுடைய பான் எண் செயலிழந்து போய்விடும். இதனால் பல முக்கியமான சேவைகள் உங்களுக்கு கிடைக்காமலே போகலாம். விண்ணப்பம் செய்யக்கூடிய அனைத்து குடிமக்களுக்கும் இந்தியா வருமான வரி துறையால் , வழங்கப்படக்கூடிய நிரந்தர கணக்கு எண் தான் பான் எண் எனப்படுகிறது. எண்கள் மற்றும் எழுத்துக்கள் கொண்ட 10 இலக்க குறியீடு தான் நம்முடைய நிதி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் என்னென்ன சேவைகளை பெறுவதற்கு எல்லாம் பான் எண் கட்டாயம் கேட்கப்படுகிறது என தெரிந்து கொள்வோம். உங்களின் பான் கார்டு செயல் இழந்துவிட்டது என்றால் உங்களால் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியாது. எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யக்கூடிய நபராக இருந்தால் உங்களுடைய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைத்துவிடுங்கள்.
ஃபிரீலான்சர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்கள் ஒரு வேலையை செய்யும் போது அதற்கான கட்டணத்தை நிறுவனங்கள் டிடிஎஸ் பிடித்தம் செய்து தான் வழங்கும். அதற்கு உங்களுடைய பான் எண் கட்டாயம் கேட்பார்கள் . இல்லை என்றால் உங்களுக்கு வரவேண்டிய முழுமையான தொகை கைக்கு கிடைக்காமலே போகலாம்.
வங்கி கணக்கு , குறிப்பாக சம்பள கணக்கு தொடங்கப் போகிறீர்கள் எனும் போது பான் எண் நிச்சயம் கேட்பார்கள். அதே போல கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் விண்ணப்பம் செய்யும் போதும் கேட்கப்படும் . அடுத்ததாக நீங்கள் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கிறீர்கள் அல்லது டெபாசிட் செய்கிறீர்கள் எனும் போது பான் எண் குறிப்பிட்டாக வேண்டி இருக்கும் .
வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் அல்லது தனி நபர் கடன் கேட்டு விண்ணப்பம் செய்யும் போது பான் எண் குறிப்பிட்டாக வேண்டும் . அப்பொழுது தான் உங்களுக்கு கடனுக்கான விண்ணப்பமே பிராசஸ் செய்யப்படும் . ஓர் நிதியாண்டில் மொத்த ஆயுள் காப்பீட்டு பிரிமியம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது எனும் போது உங்களுடைய பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம்.
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் நீங்கள் ஒரே முறையில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் கட்டாயம் பான் எண் கொடுக்க வேண்டும். அடுத்ததாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட அசையா சொத்துகளை நீங்கள் வாங்குகிறீர்கள் அல்லது விற்பனை செய்கிறீர்கள் எனும் போது பான் எண் தேவைப்படும்.ஒரே சமயத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறீர்கள் அல்லது ஒரு சேவையை பெறுகிறீர்கள் எனும் போது பான் எண் கொடுத்தால் தான் அந்த பொருளோ சேவையோ உங்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications