தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் தீவிர வாக்காளர் திருத்த பணி நடைபெற்றது . இதனை அடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இருந்த 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு நெருக்கமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டு இருக்கின்றன. இறந்தவர்களின் பெயர்கள், சரியாக முகவரி குறிப்பிடாதவர்கள் , இரண்டு இடங்களில் வாக்காளர் பெயர் இருந்தது என பல்வேறு காரணங்களால் இந்த பெயர்கள் நீக்கம் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே பலரும் உரிய ஆவணங்களை கொடுத்தும் எங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் முதலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இது இறுதி வாக்காளர் பட்டியல் கிடையாது , இது வரைவு வாக்காளர் பட்டியல் தான். பிப்ரவரி மாதத்தில் தான் இறுதி வாக்காளர் பட்டியல் இடம்பெறும். எனவே அதற்குள் உங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது .
முதலில் பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . இதற்கு பொதுமக்கள் https://elections.tn.gov.in/SIR_2026.aspx இணையதளத்திற்கு செல்ல வேண்டும் . அதில் draft electoral roll என்பதை கிளிக் செய்ய வேண்டும். https://voters.eci.gov.in/download-eroll என்ற பக்கத்திற்கு செல்லும் அதில் மாவட்டம், சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை கொடுத்து உங்கள் வாக்குச்சாவடி பெயருக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலை பதிவிறக்கி உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை தேடி கொள்ளலாம். இல்லை என்றால் https://erolls.tn.gov.in/rollpdf/acwise_pdf.aspx என்ற பக்கத்தில் சென்றால் தொகுதி , மாவட்டத்தை உள்ளிட்டு வாக்காளர் பட்டியலை பதிவிறக்கி தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் பதற வேண்டாம். உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஜனவரி 18ஆம் தேதி வரை வாய்ப்புள்ளது. உங்களின் blo அதிகாரியை தொடர்பு கொண்டோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ எளிதாக விண்ணப்பம் செய்யலாம். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் https://voters.eci.gov.in/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று New Voter Registration என்பதை கிளிக் செய்து படிவம்-6 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். Correction Of Entries என்பதை கிளிக் செய்தால் படிவம் - 8 கிடைக்கும் அதனை பதிவிறக்கி பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள சமர்ப்பிக்கலாம்.
இது தவிர தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் தரப்பில் முகாம்களும் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக சென்னையில் இன்றும் நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடக்கின்றன . சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இரண்டு நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அதனை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .
இதன்படி உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் இருக்கிறது என்றால் உரிய ஆவணங்களுடன் சென்று உரிய படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். முகாமில் இருக்கக்கூடிய அதிகாரிகள் உங்களுக்கு முறையாக வழிகாட்டுவார்கள். எனவே சென்னை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்களுடைய பெயரை இன்றும் நாளையும் நடக்கக்கூடிய சிறப்பு முகாம்களில் சென்று விண்ணப்பம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஜனவரி 18ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடித்தால் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இடம் பெறும். அப்படி இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் சட்டமன்ற தேர்தலில் உங்களால் வாக்களிக்க முடியும், இல்லை என்றால் தேர்தலில் வாக்களிக்க முடியாது.


Click it and Unblock the Notifications