இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கக்கூடிய பான் கார்டு மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அந்த பான் கார்டு செயலிழந்து போய்விடும் என மத்திய அரசும் வருமானவரித்துறையும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகிறது .
இந்தியாவில் மிக முக்கியமான இரண்டு அடையாள ஆவணங்களாக ஆதார் அட்டையையும் ,பான் கார்டையும் பயன்படுத்துகிறோம் . ஆதார் அட்டை நம்முடைய முகவரி மற்றும் புகைப்பட அடையாளச் சான்றாக பல அரசு திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டை பொறுத்தவரை நம்முடைய நிதி சம்பந்தப்பட்ட முதலீடு சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் தேவையான மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணம் .

பான் கார்டு அடிப்படையிலான மோசடிகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசும் வருமான வரித்துறையும் பான் கார்டு பயன்படுத்துபவர்கள் அதில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவித்திருக்கிறது . இதற்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பொதுமக்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விட வேண்டும் என அரசு தரப்பிலும் வருமானவரித்துறை தரப்பிலும் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் எளிமையானது. நம், போனிலேயே இந்த வேலையை சுலபமாக முடித்து கொள்ளலாம். இதன்படி https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் quick links பிரிவில் link aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து பான் எண், ஆதார் எண் , ஆதாரில் உங்களுடைய பெயர் எப்படி இருக்கிறதோ அதனை உள்ளிட வேண்டும். பின்னர் விவரங்கள் அனைத்தும் சரியாக டைப் செய்து உள்ளீர்களா என்பதை கவனித்து proceed கொடுக்க வேண்டும் . இதன் பின்னர் அதில் கேட்கப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் உங்களின் பான் எண் , ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டதை உறுதி செய்யும் மெசெஜ் உங்களுடைய செல்போனுக்கு வந்துவிடும்.
இதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி. டிசம்பர் 31ம் தேதிக்குள் உங்களுடைய பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் உங்களின் பான் கார்டு செயல் இழந்து போய்விடும். இதன் பிறகு உங்களால் அந்த பான் எண்ணை எங்கேயுமே பயன்படுத்த முடியாது. குறிப்பாக உங்களால் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய முடியாது. ஏதேனும் உங்களுக்கு வரி ரீஃபண்ட் வர வேண்டியது இருந்தால் அது கிடைக்காது.
பெரும்பாலான டிடிஎஸ் ,டிசிஎஸ் உள்ளிட்டவை நம்முடைய பான் எண்ணில் தான் வரவு வைக்கப்படும் . எனவே அந்த பணம் உங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். மேலும் புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது , டிமேட் கணக்கு தொடங்குவது , மியூச்சுவல் ஃபண்டு முதலீடு , ஏற்கனவே உள்ளதை விற்பனை செய்வது , கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாங்குவது உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்படும் .
சில நிறுவனங்கள் உங்களுடைய டீமேட் கணக்கை கூட பிளாக் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது .எனவே தான் உங்களுடைய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுங்கள் என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications