இன்றைய காலகட்டத்தில் பங்கு சந்தை பற்றிய ஆர்வம் என்பது இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகின்றது. ஆனால் பலருக்கும் பங்கு சந்தை பற்றிய அடிப்படை என்பது தெரிந்திருக்கவில்லை.
ஆக பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் குட் ரிட்டர்ன்ஸ் தளத்தில் பங்கு சந்தை பற்றிய தொடர் ஒன்றினை வெளியிட இருக்கிறோம். அதை பங்கு சந்தையின் Class Room பிரிவில் தினசரி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த தொடரில் பங்கு சந்தை என்றால் என்ன? இது எப்படி செயல்படுகிறது. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பங்கு சந்தை என்றால் என்ன?
பங்கு சந்தை என்பது நம் ஊர் தினசரி சந்தை போல தான். அங்கு பலரும் காய்கறிகள்,கீரைகள், தானியங்கள் என பலவிதமான பொருட்களை விற்பனை செய்வார்கள். அதேபோல ஒரு பொருளை பலரும் விற்பனை செய்வார்கள். அதில் நமக்கு எது தேவையோ, எது பிடித்திருக்கிறதோ அதனை தேடிப்பிடித்து வாங்குவோம். அதேபோலத் தான் பங்கு சந்தையில் பல நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் எந்த நிறுவனம் உங்களுக்கு உகந்ததோ அதனை தேடிப்பிடித்து வாங்கலாம். சந்தையில் எப்படி நாம் நமக்கு தேவையான பொருட்களை வாங்குகிறோமோ அதனை போல, சரியான நிறுவனத்தினை தேடிப்பிடித்து வாங்கலாம்.
அதெல்லாம் சரி இதனை எப்படி வாங்குவது? எப்படி இதற்கு பணம் செலுத்துவது? வாங்கிய பங்குகளை எப்படி விற்பனை செய்வது இப்படி பல கேள்விகள் எழுந்திருக்கும். அதனை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
காளையா? கரடியா அப்படின்னா?
பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ளும் முன் பங்கு சந்தையில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பங்கு சந்தையில் காளை, கரடி, புல் மார்கெட், பேர் மார்கெட், ஷார்ட் கவரிங், ஸ்டாப் லாஸ், டார்கெட், சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ், புத்தக மதிப்பு, டீமேட் என உபயோகிப்பதை கேள்வி பட்டிருப்போம். எனினும் புதியதாக பங்கு சந்தைக்கு வர நினைப்பவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு இதனை தெரிந்து கொள்ளுங்கள்.
காளை சந்தை
காளை சந்தை (Bull market) என்பது பங்கு சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், தொடர்ந்து சந்தை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். பொதுவாக நீண்டகாலத்திற்கு சந்தை ஏற்றம் காண்கிறது எனில் அதனை புல் மார்க்கெட் என்பார்கள். பொதுவாக காளை என்பதை எதையும் முட்டி தூக்கி மேலே எறியும், இதனாலும் காளை சந்தை என்றும் கூறுவார்கள்.
கரடி சந்தை
கரடி சந்தை (Bear market), காளை சந்தைக்கு நேர் எதிர். கரடியின் குணம் என்பது எதனையும் கடித்து கீழாக இழுப்பது தான். தொடர்ந்து பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதனை கரடி சந்தை என்பார்கள். இது பொதுவாக மிக மோசமான பொருளாதார மந்தம், பொருளாதார சரிவு, அரசியல் பிரச்சனைகள் என பல காரணிகளுக்கும் மத்தியில் ஏற்படலாம். எனினும் பங்கு சந்தையினை பொறுத்தவரையில் காளையானாலும் சரி, கரடியானாலும் இரண்டிலுமே லாபம் பார்க்கலாம்.
புத்தக மதிப்பு (Book Value)
பொதுவாக புத்தக மதிப்பு அதிகமாக இருந்தால் அது சிறந்த பங்கு என்ற கருத்து பங்கு சந்தை வர்த்தகர்கள் இடையே உண்டு.
புத்தக மதிப்பு = சொத்துக்கள் - கடன்கள்
ஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு என்பது அதன் சொத்து மதிப்பில் இருந்து, கடன் மதிப்பினை கழித்த பிறகு கிடைப்பதை புத்தக மதிப்பு என்பார்கள். இந்த மொத்த மதிப்பினை, நிறுவனம் வெளியிட்டுள்ள பங்கினால் வகுத்தால் கிடைப்பது தான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும்.
இன்னும் எளிதில் புரியும் படி சொல்லவேண்டுமெனில், ஒரு நிறுவனம் தவிர்க்க முடியாத காரணத்தினால் மூடப்பட்டால், அதன் சொத்துகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் மதிப்பு தான் புத்தக மதிப்பு. ஆக ஒரு பங்கினை வாங்கும் முன்பு இது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று தான்.
தினசரி வர்த்தகம் (Day Trading)
பங்கு சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் பொதுவாக அதிகம் இன்ட்ராடே வணிகம் (Intraday trade) செய்வார்கள். இதில் காலையில் வாங்கும் பங்குகளை லாபமோ நஷ்டமோ, அன்றைய வர்த்தக முடிவுக்குள் விற்பனை செய்து விட வேண்டும். இல்லை எனில் இந்த வகையான ஆர்டர்களை சந்தை முடிவில் தானாக விற்கப்படும். இதனை ஸ்கொயர் ஆப் (square off) என்பார்கள்.
டீமேட் கணக்கு (Demat account)
டீமேட் கணக்கு என்றால் என்ன? இது நீங்கள் பங்கு சந்தையில் வணிகம் செய்ய தேவையான ஒரு கணக்கு. நீங்கள் ஒரு பங்கினை வாங்கினாலும், விற்றாலும் அது உங்களது டீமேட்டில் தான் பதிவாகும். இதனை டிமெட்டீரியலைசேஷன் என்பார்கள். இங்கு நீங்கள் வாங்கும் பங்குகள், பத்திரங்கள் என அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிடும்.


Click it and Unblock the Notifications