ஏழை எளிய மக்களும் தரமான மருத்துவ சேவை பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பாக இலவச மருத்துவ காப்பீடு திட்டங்கள் வழங்குகின்றன. தமிழ்நாட்டில் முதல்முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம். அதன் பின்னர் அதிமுக ஆட்சியிலும் இது தொடரப்பட்டது.
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டமும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்படுகிறது. ரேஷன் அட்டை அடிப்படையில் தான் பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்கலுக்கும் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு.

இலவச மருத்துவ காப்பீட்டு அளவை 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். இதன் மூலம் பல உயர் சிகிச்சைகளையும் பெற முடியும். மருத்துவ சிகிச்சைக்கான செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் விஜயின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஓராண்டுக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் 25 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர குடும்பத்தின் ஆண்டு வருமானம் 1,20,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வருமான சான்றிதழை பெற்று, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரத்தியேக மையத்திற்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முதலமைச்சர் காப்பீடு அட்டைக்கு விண்ணப்பம் செய்வதற்கான பிரத்தியேக அலுவலகம் இருக்கிறது. எனவே இதுவரை இந்த திட்டத்தில் சேராத மக்கள் தங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து செல்லுபடியாகும் வருமான சான்றிதழைப் பெற வேண்டும். இதனை அடுத்து ரேஷன் கார்டு, ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும். ரேஷன் அட்டையில் யாருடைய பெயர் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் அனைவருமே செல்ல வேண்டும்.
இங்கே குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், ஆகிய தகவல்களை சரிபார்த்து உங்களின் ஆதார் மற்றும் கைவிரல் ரேகை சரிபார்க்கப்படும். இதனை அடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள இந்த அலுவலகத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். சில சமயங்களில் முகாம்கள் நடத்தப்படும் அங்கேயும் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
இத்திட்டத்தினால் சுமார் 1.50 கோடி குடும்பங்கள் தமிழ்நாட்டில் பலனடைகின்றன. இந்த திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் இதில் சிகிச்சை வழங்குகின்றன.இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும், குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993-ஐ தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

