இந்தியாவில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்த பிட்காயின், ஷிபா இனு போன்ற பல்வேறு கிரிப்டோகரன்சிகள் இன்னுமும் அரசு கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் உள்ளது.
இதனால் மத்திய அரசு இன்று துவங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டதொடரில் கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்கு முறைப்படுத்தவும், கண்காணிக்க முடியாத பிரைவேட் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் முடிவு செய்துள்ளது.
இதேவேளையில் இந்தியா டிஜிட்டல் கரன்சியும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு இரண்டையும் ஒன்றாக இணைத்து Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill 2021 என்ற தனி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.
டிஜிட்டல் கரன்சி Vs பிட்காயின்
சரி கிரிப்டோகரன்சி உதாரணமாகப் பிட்காயினும், டிஜிட்டல் கரன்சியும் ஒன்றா..? இல்லை இரண்டும் மாறுபட்டதா..? என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. இதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி
இந்திய அரசால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சியைச் சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படுகிறது. இது ரூபாய் நோட்டு போலவே இந்திய அரசால் அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பணம். இந்தப் பணத்தைத் தற்போது நாம் பயன்படுத்தும் வகையிலேயே பயன்படுத்தலாம், அதேபோல் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்க கூடியவை. ஆனால் கிரிப்டோகரன்சி முற்றிலும் மாறுபட்டவை.
கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி என்பது பிளாக்செயின் என்னும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுவது, இதை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தச் செய்தி படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் உங்கள் வீட்டில் சில கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்க முடியும். இது முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் வர்த்தகச் சந்தைக்கு வருபவை.
பிட்காயின்
இன்று கிரிப்டோகரன்சி சந்தையில் மிகப்பெரிய கிரிப்டோவாக இருக்கும் பிட்காயின்-ஐ எந்த ஒரு நாட்டின் அரசாலும் நிர்வாகம் செய்யப்படவில்லை, அதேபோல் எந்த ஒரு நிதி நிறுவனமும் நிர்வாகம் செய்யவில்லை. இதனால் முதலீட்டு சந்தைக்கு இது ஆபத்து எனச் சந்தை வல்லுனர்களால் கூறப்படுகிறது
சப்ளை அண்ட் டிமாண்ட்
மேலும் கிரிப்டோகரன்சி அனைத்தும் சப்ளை அண்ட் டிமாண்ட் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்பட்டு இதன் மதிப்பு அதிகரித்து வருகிறது. உதாரணமாகப் பிட்காயினை எடுத்துக்கொண்டால் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.
டிஜிட்டல் கரன்சியின் மதிப்பு
மேலும் ஒரு கிரிப்டோகரன்சி-யின் மதிப்பு எப்போது வேண்டுமானாலும் மாறும், ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிடும் டிஜிட்டல் கரன்சியின் மதிப்பு இந்தியாவில் எந்தக் காலமும் மாறாது.
ஆனால் இந்திய அரசால் உருவாக்கப்பட்டும் டிஜிட்டல் கரன்சி 100% பாதுகாப்பானது, கிரிப்டோகரன்சி அப்படியில்லை.
ரூபாய், டாலர்
தற்போது பிட்காயினுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் வெளிநாடுகளில் பல நிறுவனங்கள் ரூபாய், டாலர் போலவே பிட்காயின் பெற்றுக்கொண்டு பொருட்களையும், சேவைகளையும் வழங்குகிறது. ஆனால் இதன் மதிப்பு அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொள்ளும் காரணத்தால் பல வகையில் பாதிப்பு ஏற்படும்.
மதிப்பும், பாதுகாப்பும்
சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி மற்றும் பிட்காயின் இரண்டும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இயங்குகிறது. ஆனால் இதன் மதிப்பில் இருக்கும் பாதிப்பும், பாதுகாப்பும் தான் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. இதேவேளையில் டிஜிட்டல் கரன்சி மூலம் பல நன்மைகள் அரசுக்கு உள்ளது.