இன்றளவிலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிக சிறந்த சேமிப்பு திட்டமாக சம்பளதாரர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களின் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு சிறப்பான திட்டமாகவும் இருந்து வருகிறது.
இந்த திட்டம் பலரையும் கவர முக்கிய காரணம் அவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டத்தில் வரிச்சலுகை உண்டு என்பதே. ஆனால் இந்த வரிச் சலுகைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி கடந்த பட்ஜெட்டில் வைக்கப்பட்டது எனலாம்.
எப்படியிருப்பினும் இந்த வரி திட்டமானது அதிகளவில் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கே, சற்று தாக்கம் இருக்கும் என்பதும் மறுக்க முடியா உண்மையும் கூட.
பிஎஃப் புதிய வரி
கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல் பழைய விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தது எனலாம். ஏனெனில் பிஎஃப் வரி விகிதத்தில் ஒரு புதிய திருத்தத்தினை கொண்டு வந்தது. அதன் படி ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விதிக்கப்படும். இந்த நடவடிக்கையானது கடந்த ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு தளர்வுகள்
எனினும் இதில் சில கட்டுப்பாடுகளுடன் சற்று தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளுடன் இந்த உச்ச வரம்பினை 5 லட்சமாக உயர்த்துவதாகவும் அப்போது அறிவிக்கப்பட்டது. அதாவது நிறுவனம் தரப்பில் இருந்து 12% மேல் பங்களிப்பு இல்லாவிட்டால் மட்டுமே இந்த விதி பொருந்தும். அத்தகைய ஊழியர்களுக்கு மட்டும் 5 லட்சம் வரையிலான பங்களிப்புகளுக்கு வரி சலுகை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலும் அரசு துறை ஊழியர்களுக்கு இது பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விலக்கு
குறைந்தபட்சம் ஒரு ஊழியர் 5 ஆண்டுகள் எந்த பங்களிப்பும் செய்யப்படாத உங்கள் கணக்கின் நிலுவை தொகையை எடுக்க, எந்த வித வரியும் இல்லாமல் விலக்கு அளிக்கப்படுகிறது. இது உங்கள் இபிஎஃப் கணக்கில் எவ்வளவு மாதம் டெபாசிட் செய்யப்பட்டது என்பதை பொறுத்து இந்த சலுகை தீர்மானிக்கப்படுகிறது.
டிடிஎஸ் பிடித்தம்
அதே போல 5 வருடம் தொடர்ச்சியாக வேலை செய்வதற்கு முன்பே நீங்கள் இபிஎஃப் பணத்தினை எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இதே ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் எடுக்கும்போது டிடிஎஸ் பிடித்தம் இருக்காது. 5 வருடத்திற்கும் குறைவாக இருந்தால் உங்களுக்கு டிடிஎஸ் விதிக்கப்படும். இது 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் டிடிஎஸ் 10% என்ற விகிதத்தில் இருக்கும். இதே உங்களிடத்தில் பான் கார்டு இல்லையெனில் 30% ஆக பிடித்தம் செய்யப்படும்.
இதனையும் கவனத்தில் கொள்ளுங்கள்
மேலும் 5 ஆண்டுகளுக்குள் திரும்பப்பெறப்படும்போது, நிறுவனத்தின் பங்களிப்பு, அதோடு வட்டி விகிதம் ஆகியவையும் சம்பளமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வரி விதிக்கப்படும். இது தவிர வேறு எந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கும் வரி விதிக்கப்படும். உங்களது மொத்த வருமானமும் வரி இல்லாததாக இருந்தால், நீங்கள் படிவம் 15ஜி அல்லது படிவம் 15 ஹெச்சினை கொடுக்கலாம். இதனால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதில்லை.