பொதுவாக ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது சிறு முலீட்டாளர்களுக்கு நல்ல நிறுவனங்களின் பங்குகளை கூட குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
2022ல் ஐபிஓ-க்கள் எண்ணிக்கை மற்றும் திரட்டப்பட்ட நிதி என்பது குறைந்த அளவு தான் என்றாலும், 2023ம் ஆண்டு நம்பகமான ஒரு ஆண்டாக பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்சம் சுமார் 57 ஐபிஓ-க்கள் அடுத்த ஆண்டில் இருக்கலாம் என்றும் , அதன் மூலம், 85,605.59 கோடி ரூபாய் நிதியும் திரட்டப்படலாம் என முதல் கட்ட தரவின் மூலம் தெரிய வந்துள்ளது. வரும் ஆண்டில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 நிலவரம்?
கடந்த 2021ல் 63 பொது பங்கு வெளியீடு மூலம். 1,18,723 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்பட்டது. இதுவே 2022ல் 40 பங்கு வெளியீடுகள் செய்யப்பட்ட நிலையில், அதன் மூலம் 59,412 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்பட்டது.
நடப்பு ஆண்டில் ஐபிஓ-க்கள் என்பது மூன்று துறைகளில் பெரியளவில் இருந்தது. இது சமையல் எண்ணெய், இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவமனை& சுகாதார சேவைகள் என இருந்தன. இந்த மூன்று துறைகள் மட்டும் மொத்த வெளியீட்டில் 55% பங்கு வகித்தன.
2023 திட்டம் என்ன?
அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள ஐபிஓ-வில் 28 நிறுவனங்கள் 1000 கோடி ரூபாய்க்கு மேலாக திரட்டலாம் என தெரிகிறது. இந்த நிறுவனங்கள் செபியின் ஒப்புதலை ஏற்கனவே பெற்றுள்ளன. இதே 14 நிறுவனங்கள் 2000 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன. 5 நிறுவனங்கள் 5000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளன.
ஆதார் ஹவுஸிங் பைனான்ஸ்
அடுத்த ஆண்டில் சந்தையை கலக்க உள்ள 10 மிகப்பெரிய ஐபிஓ-க்கள் எது எது? வாருங்கள் பார்க்கலாம்.
ஆதார் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 7300 கோடி ரூபாய் அளவுக்கு நிதியினை திரட்டவுள்ளது. பிளாக்ஸ்டோன் பின்னணியில் உள்ள இந்த நிறுவனம், புதிய வெளியீடாக 1500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், இதே 5800 கோடி ரூபாய் ஆஃபர் ஃபார் சேல் மூலமும் விற்பனை செய்ய உள்ளது.
ஏபிஐ ஹோல்டிங்ஸ் (பார்ம் ஈஸி)
ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனம் 6250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் பார்மா நிறுவனமான பார்மா ஈஸி-ன் தாய் நிறுவனமான ஏபிஐ ஹோல்டிங்ஸ், கடந்த நவம்பர் மாதமே ஐபிஓ-வுக்கான ஒப்புதலை செபியிடம் பெற்றுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியின் மூலம் 1500 கோடி ரூபாய், அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மீத தொகையில் நிறுவனத்திற்கு உண்டான கடன், அதன் நிறுவன வளர்ச்சி தேவையான நடவடிக்கைகளுக்கு முதலீடு செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
பாரத் FIH
பாக்ஸ்கான் டெக்னாலஜி நிறுவனத்தினை சேர்ந்த பாரத் FIH, இந்தியாவின் மிகப்பெரிய மின்சாதன உற்பத்தி சேவை நிறுவனமாகும். இது கடந்த ஜூன் மாதமே 5004 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டுக்கு, செபியிடம் ஒப்புதலை பெற்றது. இதில் புதிய வெளியீடாக 2502 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கும், புரோமோட்டர்கள் வசம் உள்ள 2502 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
மேக்லியோட்ஸ் பார்மா
மேக்லியோட்ஸ் பார்மா நிறுவனம் கடந்த மே மாதம் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டுக்கு அனுமதியினை பெற்றுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் புதிய பங்கு எதுவும் வெளியிடப்படவில்லை. மாறாக புரோமோட்டர்கள் வசம் உள்ள 6.05 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ்
டிவிஎஸ் மொபைலிட்டி குழுமத்தினை சேர்ந்த இந்த நிறுவனமும் கடந்த மே மாதமே செபியின் ஒப்புதலை பெற்றது. இந்த நிறுவனமும் 5000 கோடி ரூபாய் நிதியினை பங்கு வெளியீடு மூலம் திரட்ட உள்ளது. இந்த 5000 கோடி ரூபாயில், 2000 கோடி ரூபாய் என்பது புதிய வெளியீடாகும். இதில் மீதமுள்ள 3000 கோடி ரூபாயும் புரோமோட்டர்கள் வசம் உள்ள பங்காகும். இந்த நிறுவனம் ஆட்டோமோட்டிவ் சம்பந்தமான உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் ஒரு நிறுவனமாகும்.
பேப் இந்தியா
பேப் இந்தியா நிறுவனமும் ஐபிஓ மூலம் 5000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு கடந்த ஏப்ரல் மாதமே செபியும் ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் லைஃப்ஸ்டைல் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இதன் சொந்த பிராண்ட் பேப் இந்தியா & ஆர்கானிக் இந்தியா ஆகும். இதன் வெளியீட்டில் 500 கோடி ரூபாய் புதிய வெளியீடாக இருக்கலாம் எனவும், புரோமோட்டர்கள் வசம் 2,50,50,543 பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
நவி டெக்னாலஜி
நவி டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒரு நிதி சம்பந்தமான சேவை நிறுவனமாகும். இது டிஜிட்டல் ஆப் வழியாக கடன் வழங்கும் ஒரு நிறுவனமாகும். இது தனி நபர் கடன், வீட்டுக் கடன், ஹோம் லோன், மியூச்சுவல் ஃபண்டுகள் என பல சேவைகளை வழங்குகிறது. 3350 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
TBO டெக்
பயண சேவை நிறுவனமான TBO டெக், 2100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதில் 900 கோடி ரூபாய் புதிய வெளியீடாகவும், 1200 கோடி ரூபய் புரோமோட்டர்கள் வசம் உள்ள பங்காகவும் உள்ளது. இந்த நிறுவனம் ஆன்லைனில் தனது சேவையினை வழங்கி வரும் நிறுவனம், மே 19 அன்று பங்கு வெளியீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அல்லைட் பிளெண்டர்கள் & டிஸ்டில்லர்கள்
அல்லைட் பிளெண்டர்கள் & டிஸ்டில்லர்கள் நிறுவனத்தின் ஐபிஓ மதிப்பு 2000 கோடி ரூபாயாகும். இது ஒரு மதுபான நிறுவனமாகும். இது இந்திய மிகப்பெரிய வெளி நாட்டு மதுபானம் நிறுவனமாகும். விற்பனை அளவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய நிறுவனமாகும். இந்த வெளியீட்டில் 1000 கோடி ரூபாய் புதிய வெளியீட்டினை செய்யவுள்ளது. இதே 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் புரோமோட்டர் வசம் உள்ள பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
CMR கிரீன் டெக்னாலஜிஸ்
CMR கிரீன் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதில் புதிய வெளியீடாக 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதே மீதமுள்ள பங்கினினை புரோமோட்டர்கள் வசம் உள்ள பங்கானது வெளியீடு செய்யப்படவுள்ளது.