பங்கு சந்தை முதலீடுகளில் மீடியம் டெர்மில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் லாபகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படி நீண்டகால நோக்கில் லாபம் கொடுத்த 5 பங்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
இது முதலீட்டாளர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது UNO மிண்டா ஆகும். இது 7622% ஏற்றம் கண்டு உள்ளது.
ரூ.1 லட்சம் டூ ரூ.77 லட்சம்
UNO மிண்டா நிறுவனத்தின் பங்கு விலையானது நவம்பர் 1, 2012 அன்று 7.05 ரூபாயாக இருந்தது. இந்த பங்கின் விலையானது நவம்பர் 1, 2022ல் 544.25 ரூபாயாக ஏற்றம் அதிகரித்துள்ளது. ஒரு தசாப்த காலத்திற்கு முன்பாக இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 77 லட்சம் ரூபாயாக மாறியிருக்கும்.
UNO மிண்டா இலக்கு விலை
UNO மிண்டா நிறுவனம் மிண்டா இண்டஸ்ட்ரீஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது சுவிட்சுகள், லைட்டிங், அலாய் வீல்கள், இருக்கைகள், சத்தம் எழுப்பும் உபகரணம் உள்ளிட்ட பலவற்றையும் உற்பத்தி செய்து வரும் ஒரு ஆட்டோ துணை நிறுவனமாகும்.
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகம் உள்ளதை அடுத்து, இந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி வலுவாக காணப்படுகிறது. இதற்கிடையில் இப்பங்கின் இலக்கினை நிபுணர்கள் 650 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.
மற்ற பங்குகள் என்னென்ன?
அடுத்ததாக இந்த டாப் பட்டியலில் இருப்பது எஸ்கார்ட்ஸ் குபோடா ஆகும். இது 2983% ஏற்றம் கண்டுள்ளது.
3வதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2851% ஏற்றம் கண்டுள்ளது..
4வது ஆக ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் 1515% ஏற்றம் கண்டுள்ளது.
5வது ஆக பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 1388% என்ற அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
ரூ1 லட்சம் முதலீடு
மேற்கண்ட இந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆக அதிகரித்திருக்கும்.
குளோபல் தரகு நிறுவனம் ஒன்று, டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்கினை அதிகரிக்கலாம் என்றும், அதன் இலக்கு விலையினை 1385 ரூபாயாக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம்
டிவிஎஸ் நிறுவனம் நடுத்தர மற்றும் நீண்டகால நோக்கில் மின்சார வாகன சந்தையில் வலுவான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலகட்டத்தில் பிஎஸ்இ ஆட்டோ குறியீடானது 102% ஏற்றம் கண்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ள நிலையில், ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி வலுவாக இருக்கும். இருப்பினும் வலுவாக இருக்கும் வட்டி விகிதங்கள், உலகளாவிய மந்த நிலையின் தாக்கமும், ஆட்டோ மொபைல் துறைக்கு முக்கிய சவால்களாக இருக்கலாம்.
மார்ஜின் பாதிக்கலாம்
மேலும் தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் மூலதன பொருட்கள் விலையானது உச்சத்தில் காணப்படுகிறது. சிப் சப்ளையில் பற்றாக்குறையே இருந்து வருகின்றது. இது ஆட்டோ மொபைல் துறையில் பெரும் சவாலாக இருந்து வந்தாலும், இந்தியாவில் சிப் உற்பத்தியினை அரசு துரிதப்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் அதிகரித்து வரும் செலவினங்களுக்கு மத்தியில் ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் மார்ஜின் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.