கச்சா எண்ணெய் முதல் டெலிகாம், ரீடைல் வர்த்தகம் வரை அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 52 வார உயர்வை அடைந்துள்ளது. இதனால் மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து அதன் வராலாற்று உச்ச அளவிற்கு கொண்டு செல்கின்றனர்.
இன்றைய 52 வார உயர்விற்கு என்ன காரணம்..?
ரிலையன்ஸ் ஜியோ
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் மற்றும் லாபத்தை அளிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 52 வரா உயர்வை சந்தித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இது சுமார் 9 வருட உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் பங்குகள்
புதன்கிழமை காலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் 1,498.80 ரூபாயுடன் துவங்கிய நிலையில், 10 மணியளவில் 1.40 சதவீதம் உயர்ந்து 1,516 ரூபாய் வரையில் உயர்ந்து 52 வார உயர்வை அடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்குகள் அதிகப்படியாக 1,524.50 ரூபாயும், குறைவாக 1,496 ரூபாய் என்ற அளவையும் அடைந்தது.
கட்டண உயர்வு
ஜியோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு படி 399 ரூபாய் கட்டணத்தில் 3 மாத அன்லிமிடெட் சேவையை பெறலாம், முன்பு நடைமுறையில் இருந்த 309 ரூபாய் திட்டம் இனி 2 மாதங்களுக்கு மட்டுமே சேவை அளிக்கப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது.
ஜூலை 11
இப்புதிய திட்டம் ஜூலை 11ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜியோவின் இப்புதிய திட்டத்திற்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
பிற நிறுவனங்கள்
ஜியோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் உயர்ந்த நிலையில், ஏர்டெல் சரிவை சந்தித்துள்ளது. மேலும் ஐடியா செல்லுலார் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது.