அதானி குழுமத்தின் பிரபல துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாகவே சரிவினைக கண்டு வருகின்றது. குறிப்பாக சமீபத்திய அமர்வுகளாகவே லோவர் சர்க்யூட் ஆகி வருகின்றது.
இந்தியாவின் முன்னணி துறைமுக நிறுவனமான இருக்கும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தொடர் சரிவினால், அதிக மதிப்புடைய டாப் 50 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரம்?
இன்று காலை தொடக்கத்திலேயே அதானி போர்ட்ஸ் நிறுவனம் 10 சதவீதம் சரிவினைக் கண்டு லோவர் சர்க்யூட்டில் தான், 415.80 ரூபாயாக தொடங்கியது. இது அதன் புதிய 52 வார குறைந்தபட்ச விலையினை எட்டியுள்ளது. எனினும் சற்றே அதிகரித்த நிலையில், தற்போது 2.18 மணி நிலவரப்படி 486.7 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இப்பங்கின் விலையானது கடந்த அமர்வில் 462 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்திருந்தது.
டாப் 50ல் இருந்து வெளியேற்றம்
இந்த சரிவின் மத்தியில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 87,375.8 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது டெக் மகேந்திரா, ஸ்ரீ சிமெண்ட்ஸ்,கோத்ரேஜ் கன்சியூமர், ஈச்சர் மோட்டார்ஸ், டாபர் இந்தியா, சீமென்ஸ் மற்றும் பிற நிறுவனங்களை காட்டிலும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் டாப் 50 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி போர்ட்ஸ் வெளியேறியுள்ளது.
58% சரிவு
அதானி போர்ட்ஸ் தவிர மற்ற அதானி குழும பங்குகள் தற்போதும் சரிவில் தான் காணப்படுகின்றன .இது ஹிண்டர்ன்பர்க்கின் ஆய்வறிக்கையானது வெளியான ஜனவரி 24ல் இருந்து சரிவிலேயே காணப்படுகின்றன. இதன் காரணமாக அதானி போர்ட்ஸ் நிறுவனமும் கூட , அதன் 52 வார உச்சத்தில் இருந்து 58% சரிவில் காணப்படுகின்றது. இதன் 52 வார உச்சம் 987.90 ரூபாயாக கடந்த செப்டம்பர் 2022ல் தொட்டது.
1 மாதத்தில் ரொம்ப மோசம்
தற்போது முதலீட்டாளர்களின் முதலீடானது பாதியாக குறைந்துள்ளது எனலாம். அதுவும் இது கடந்த 1 மாதத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 35% சரிவில் காணப்படுகின்றது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் இந்தியன் ஆயில்டேங்கிங் லிமிடெட் நிறுவனத்தின் (IOTL), 49.38% பங்கினை அதானி குழுமம் வாங்கியுள்ளது. இது அதானி குழுமத்தின் சேமிக்கும் திறனை அதிகரித்துள்ளது.
மிகப்பெரிய சேமிக்கும் திறன் கொண்ட நிறுவனம்
இது குறித்து கரண் அதானி கடந்த ஆண்டில் ஒரு அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனத்தின் சேமிப்பு திறன் என்பது 200% அதிகரித்து, 3.6 மில்லியன் கிலோ லிட்டர்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அதானி மூன்றாவது பெரிய திரவ சேமிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. இது உலகளவில் மிகப்பெரிய போக்குவரத்து பயன்பாடாக மாறுவதற்கான, எங்கள் லட்சியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
இனி எப்படியிருக்கும்?
அதானி போர்ட்ஸ் மட்டும் அல்ல, மற்ற அதானி குழும பங்குகளும் தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. இது பிரச்சனைக்கு முழுமையான தீர்வு என்பதும் தற்போதைக்கு வருமா? என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இதற்கிடையில் இன்று வரும் நாட்களிலும் அதானி குழும பங்குகளில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.