இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் அதானி குழும நிறுவனங்களில் அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் 4வது நிறுவனமாக 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இதன் வாயிலாகக் கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பு இன்று 2.33 சதவீதம் அதிகரித்து 129.9 பில்லியன் டாலராக உள்ளது. இந்தக் கொண்டாட்டத்திற்கு மத்தியில் அதானி பவர் தரமான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களை வியக்கவைத்துள்ளது.
அதானி பவர்
அதானி பவர் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 278 கோடி ரூபாய் லாபமாகப் பெற்ற நிலையில், ஜூன் 31, 2022 உடன் முடிந்த காலாண்டில் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தின் அளவு 16 மடங்கு அதிகரித்து 4,780 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.
வருவாய்
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அதானி பவர் சுமார் 7,213 கோடி ரூபாயை வருவாயாகப் பெற்று இருந்த நிலையில், தற்போது ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 115 சதவீதம் உயர்ந்து 15,509 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதானி பவர் நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாயின் தடாலடி உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா..?
நிலக்கரி விலை
அதிக இறக்குமதி நிலக்கரி விலை மூலம் கிடைத்த PPA கட்டணங்களின் உயர்வு, அதிகப்படியான மாற்று நிலக்கரி பயன்பாடு, மேம்படுத்தப்பட்ட வணிகர்கள், குறுகிய காலக் கட்டணங்கள், குஜராத் டிஸ்காம்களுடன் 1,234 MW Bid-2 PPA திட்டம் ஆகியவற்றின் காரணமாக இக்காலகட்டத்தில் வருவாய் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
Ebitda அளவு
ஜூன் காலாண்டில் அதானி பவர் நிறுவனத்தின் Ebitda 7,506 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் இது 2,292 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 227 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
அதானி பவர் பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் அதானி பவர் நிறுவனப் பங்குகள் இன்று 3.76 சதவீதம் அதிகரித்து 341 ரூபாயாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் அதானி பவர் நிறுவனப் பங்குகள் சுமார் 236.62 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் முதல் வர்த்தக நாளாக ஜனவரி 1ஆம் தேதி ஒரு பங்கின் விலை 101.30 ரூபாயாக இருந்தது 345.05 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.