நேற்றைய மார்க்கெட் அப்டேட் செய்திகளிலேயே, கடந்த செப்டம்பர் 24, 2019 முதல் அக்டோபர் 09, 2019 வரையான அனைத்து வர்த்தக நாட்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இரண்டு நாள் மட்டுமே சென்செக்ஸ் ஏற்றம் கண்டு இருக்கிறது எனச் சொல்லி இருந்தோம். செப்டம்பர் 26, 2019 மற்றும் அக்டோபர் 09, 2019 தான் அந்த இரண்டு நாட்கள். இப்போதும் டிரெண்ட் மாற்றம் கண்டதாகத் தெரியவில்லை. இன்றும் சென்செக்ஸ் இறக்கம் கண்டு கொண்டு தான் இருக்கிறது.
அதே போல நேற்றே, சென்செக்ஸ் இந்த 38,000 புள்ளிகள் உடன் போராடிக் கொண்டு இருப்பதையும் சொல்லி இருந்தோம். சென்செக்ஸின் 150 நாள் மூவிங் ஆவரேஜ் புள்ளியான 38,200 புள்ளிகளுடன் மோதிக் கொண்டு இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம். இந்த 38,200 புள்ளிகளைக் கடப்பதும் அத்தனை சுலபம் இல்லை என்பதை 30 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜ் புள்ளிகள் உடன் சொல்லி இருந்தோம். எனவே நேற்று கணித்தது போலவே, சென்செக்ஸ் தன் 38,000 புள்ளிகளில் தாக்கு பிடிக்க முடியாமல் இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 38,177 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 38,130 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிளேயே இறக்கம் காணத் தொடங்கிவிட்டது. அந்த இறக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 37,802 லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 375 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. தற்போது சுமாராக 37,815 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நிஃப்டி நேற்றைய குளோசிங் புள்ளியை விட 90 புள்ளிகள் இறக்கம் கண்டு 11,224 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 06 பங்குகள் ஏற்றத்திலும், 24 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பி.எஸ்.இ-யில் 2,511 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 818 பங்குகள் ஏற்றத்திலும், 1,522 பங்குகள் இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. மொத்தம் 2,512 பங்குகளில் 35 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 236 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. வங்கி, பொதுத் துறை வங்கி, தனியார் வங்கிகள், அரசு வங்கி, போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் கீழே இறக்கிக் கொண்டு இருக்கின்றன.
ஏர்டெல், க்ராசிம், ரிலையன்ஸ், ஹெச் சி எல் டெக், சன் பார்மா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், கெயில், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.