ஒரு பக்கம் அண்ணன் முகேஷ் அம்பானி தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தைச் சவுதி ஆராம்கோ நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும், பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதில் அமேசான் உடன் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில்.
தம்பி அனில் அம்பானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு வெறும் 3 மாதத்தில் கிட்டதட்ட 1000 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சியைச் சத்தமே இல்லாமல் அனில் அம்பானி சாதித்துள்ளது மட்டும் அல்லாமல் தன்னையும், தன் நிறுவனத்தையும் நீண்ட காலமாக நம்பியிருந்த ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அளித்துள்ளார் அனில் அம்பானி.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்
அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு மார்ச் மாதம் வெறும் 733 கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், மே 2021ல் 3,890 கோடி ரூபாயாகவும், ஜூன் 18ஆம் தேதி 7,866 கோடி ரூபாய் எனக் கடந்த 3 மாதத்தில் 1000 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் இது 8000 கோடி ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
20 நாளில் இரட்டிப்பு வளர்ச்சி
அனில் அம்பானி-யின் ரிலையன்ஸ் குரூப் கீழ் இருக்கும் ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த 20 நாட்களில் சுமார் இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இதன் மூலம் ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர் சந்தை மதிப்பு 2,767 கோடி ரூபாயாகவும், ரிலையன்ஸ் பவர் சந்தை மதிப்பு 4,446 கோடி ரூபாயாகவும், ரிலையன்ஸ் கேப்பிடல் சந்தை மதிப்பு 653 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
50 லட்சம் ரீடைல் முதலீட்டாளர்கள்
கடந்த இரண்டு வருடமாக இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த FII மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறிய நிலையில் அனில் அம்பானி-யின் ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்தைக் காப்பாற்றி வந்து இந்நிறுவனத்தின் 50 லட்சம் ரீடைல் முதலீட்டாளர்கள் தான்.
அதிரடி வளர்ச்சிக்கு என்ன காரணம்..?
ரிலையன்ஸ் இன்பரா - புதிதாக 550 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் பவர் - ப்ரோமோட்டர் நிறுவனத்திற்குப் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் கேபிடல் - இந்நிறுவனத்தின் கீழ் இருக்கும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் சுமார் 2,887 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனப் பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கி
இதேவேளையில் ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கி ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் மீது இருந்த ரெட் பிளாக்-ஐ நீக்கியுள்ளது. இது அனைத்தும் அனில் அம்பானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு வெறும் 3 மாதத்தில் கிட்டதட்ட 1000 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைய வழிவகுத்துள்ளது.