டந்த பல ஆண்டு காலமாக நடந்து வந்த அயோத்தியா நில வழக்கை, ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருப்பதால், சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அனலிஸ்டுகள்.
அதோடு இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளில் நிலவும் ஒரு நிலையற்ற தன்மையையும், இந்த தீர்ப்பு நீக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அனலிஸ்டுகள்.
மிக முக்கியமாக சர்வதேச அளவில், இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கும் முதலீட்டாளர்களுக்கு, இந்த தீர்ப்பு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
அயோத்தியா நில வழக்கில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அலஹாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை எதிர்த்து பல தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்குக்கு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அந்த தீர்ப்பில், "சர்ச்சைக்குரிய இடம் ராம் ஜென்ம பூமி நியாசுக்கு சொந்தம். இந்த சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் கோவில் கட்ட அடுத்த 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்" என தன் தீர்ப்பில் சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இந்த செய்தியை, இந்திய பங்குச் சந்தை ஒரு நல்ல பாசிட்டிவ் செய்தியாகத் தான் பார்க்கும் என்கிறார் கே ஆர் சோக்ஸி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவன் சோக்ஸி. எனவே வரும் திங்கள் அன்று சென்செக்ஸ் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம்.
"இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம் உத்திரப் பிரதேசம். இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்க்க வேண்டும் என்றால், உத்திரப் பிரதேசத்தில் இருந்து மட்டும் சுமாராக 1 ட்ரில்லியன் டாலருக்கு பொருளாதாரம் வளர்ச்சி பங்களிப்பு இருக்க வேண்டும்"எனச் சொல்கிறார் விஜய் கேடியா.
அதோடு, அயோத்தியாவில் கோவில் மற்றும் மசூதி கட்டி முடிக்கப்பட்டால், அந்த இடத்தைப் பார்வையிடவே நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள், எனவே உத்திரப் பிரதேசத்தின் பொருளாதாரமும் மேம்படும் எனச் சொல்லி இருக்கிறார் விஜய் கேடியா.
இவரைத் தொடர்ந்து "அரசு கடந்த 70 ஆண்டுகளில் செய்யாத பல விஷயங்களை இப்போது செய்து கொண்டிருக்கிறது. முதலில் காஷ்மீர், இப்போது அயோத்தியா தீர்ப்பு, இப்படியே தனி நபர் வருமான வரிச் சலுகை மற்றும் மூல தன ஆதாய வரிகளிலும் பெரிய மாற்றங்கள் வரும்" எனச் சொல்லி இருக்கிறார் ஐ ஐ எஃப் எல் நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்ஜிவ் பசின்.