அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்குச் சாதகமாகப் பல ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் தளர்வு, GSP தகுதியை மீண்டும் கொடுக்கப் பேச்சுவார்த்தை, எல்லை பாதுகாப்பில் இந்தியா- அமெரிக்கா இடையேயான நட்புறவு ஆகியவை திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரிய அளவில் பிரதிபலித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 42,566.34 புள்ளிகள் என்ற புதிய வரலாற்று உச்சத்தை அடைந்து முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து நிலையான வளர்ச்சியை அடைந்து வருவதால் இனி வரும் நாட்களில் தினமும் புதிய உச்சத்தை அடையவும் வாய்ப்பு உள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகம்
அமெரிக்க - இந்தியா நட்புறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி இந்திய முதலீட்டுச் சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இன்று காலை சென்செக்ஸ் 42,273 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கி ஆரம்பத்திலேயே 380 புள்ளிகள் உயர்வில் வர்த்தகம் துவங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொடர் உள்நாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகத்தால் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 550 புள்ளிகள் வரையில் உயர்ந்து 42,566.34 புள்ளிகள் என்ற புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
சர்வதேச சந்தை
அமெரிக்க அதிபர் தேர்தலின் எதிரொலியில் தொடர்ந்து நான்கு நாள் வளர்ச்சியில் இருந்த சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மிகவும் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்திருந்தாலும், ஆசிய சந்தையில் இதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இது இந்திய சந்தையின் வர்த்தக உயர்வுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
பொருளாதார நடவடிக்கை
அமெரிக்கா உட்பட, ஆசிய சந்தையிலும் உற்பத்தி, சேவைத் துறை, வேலைவாய்ப்பு எண்ணிக்கை, பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி சிறப்பாக இருந்த காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.
இதன் வாயிலாகவே ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங் மற்றும் இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர்.
காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டில் வங்கித்துறை சிறப்பான லாபம், வருவாய் மற்றும் வர்த்தக வளர்ச்சியை அடைந்துள்ளது. இதேபோல் ஐடி துறை ஜோ பிடன் வெற்றியின் காரணமாக விசா கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு அதிகளவிலான வளர்ச்சியை அடைய வாய்ப்புகள் உள்ளது.
இதைத் தொடர்ந்து மெட்டல் மற்றும் பார்மா துறை சார்ந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும் காரணத்தால் இன்றைய வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது.
அன்னிய முதலீடுகள்
அக்டோபர் மாதம் முழுவதிலும் FPI முதலீட்டாளர்கள் வெறும் 22,033 கோடி ரூபாய் தொகை மட்டுமே முதலீடு செய்திருக்கும் நிலையில் வெறும் 5 நாட்கள் வர்த்தகத்தில் 8,381 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கூட்டியுள்ளது.
அமெரிக்கத் தேர்தல்
நவம்பர் 3ஆம் தேதிக்கு முன் வெளியான கருத்துக் கணிப்பில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் டிரம்ப் மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா மீது இருக்கும் GSP தகுதி நீக்கம், விசா கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என்ற நிலை இருந்தது.
ஆனால் நவம்பர் 3ஆம் தேதிக்குப் பின் இந்த நிலை முற்றிலும் மாறிய அமெரிக்கப் பங்குச்சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதன் எதிரொலி தான் இந்தியச் சந்தையில் குவித்துள்ள 8,381 கோடி ரூபாய் முதலீடு. இந்த முதலீடு உள்நாட்டு முதலீட்டாளர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிப்டி
மேலே குறிப்பிட்ட காரணங்கள் வாயிலாகவே இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.