டெல்லி: நிர்மலா சீதாராமனின் 2019 - 20 நிதி ஆண்டு பட்ஜெட்டுக்கு சந்தை மீண்டும் இறக்கத்தையே பரிசாகக் கொடுத்திருக்கிறது. சந்தையை மேலும் இறக்க ஏதாவது காரணங்கள் இருக்கிறதா..?
ஏற்கனவே சென்செக்ஸ், பட்ஜெட் அன்று காலை 39,990 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தன் உச்ச புள்ளியான 40,032 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.
ஆனால் வர்த்தக நேரத்தின் முடிவில் சந்தை சுமார் 394 புள்ளிகள் சரிந்து 39,513 புள்ளிகள் நிறைவடைந்தது. இனி வரும் நாட்களில் இந்திய பங்குச் சந்தை இறக்கத்துக்கு வலு சேர்க்கும் விஷயங்கள் என்ன இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனம்
எலெக்ட்ரின் கார்களை வங்கிக் கடன் மூலம் வாங்கினால் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் கடனுக்கான வட்டிக்கு வரிக் கழிவு கொடுத்திருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எலெக்ட்ரானிக் வாகனங்கள் மீது கவனம் போகும். அதே நேரம் வழக்கமாக பெட்ரோல், டீசல் கார்களுக்கான விற்பனை பெரிய அளவில் குறையலாம். இதுவரை இந்தியப் பங்குச் சந்தையில் வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களுக்கான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. எனவே சந்தை இந்த நடவடிக்கையை ஒரு நெகட்டிவ்வாக பார்க்கிறது.
பொது மக்களுக்கான பங்குகள் 35 சதவிகிதம்
இதுவரை இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் 25 சதவிகிதம் இந்திய பங்குச் சந்தைகளில் பொது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த பட்ஜெட்டில் இந்த அளவை 35 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறார்கள். எனவே பல்வேறு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்தே வெளியேற வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
பெட்ரோல் டீசல் விலை
பெட்ரொல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் மீது ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்பட்டது, தங்கம் மீதும் 2.5 சதவிகித சுங்க வரி கூடுதலக விதிக்கப்பட்டிருக்கிறது. ஏசி இயந்திரங்கள் மீதும் சுங்க வரி 10%-ல் இருந்து 20% ஆக அதிகரித்திருப்பதை எல்லாம் சந்தைக்கு ஒத்து வராத அறிவிப்புகள். இதை சந்தை கொஞ்சம் நெகட்டிவ்வாகவே பார்க்கிறது.
வரி விதிப்பு
ஆண்டுக்கு 2 கோடி முதல் 5 கோடி வரை சம்பாதிப்பவர்களுக்கு 3 சதவிகித வரியும் (effective tax rates), ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 7 சதவிகித வரியும் (effective tax rates) விதித்திருக்கிறார்கள். இதை சந்தை ஒரு பெரிய நெகடிவ்வாகப் பார்க்கிறது. எனவே வரும் நாட்களில் சந்தை இறங்கினால் அதற்கு இந்த் பட்ஜெட் அறிவிப்புகளும், இந்த அறிவிப்புகளால் நடக்கப் போகும் சம்பவங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.