கெமிக்கல் நிறுவனமான கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி நிறுவனம் அதன் பொது பங்கு வெளியீட்டினை இன்று செய்துள்ளது.
முதல் நாளான இன்று 1.09 முறை சந்தாவினை பெற்றுள்ளது. அதன் பொதுப் பங்கு வெளியீட்டின் அளவு 1.23 கோடி பங்குகளாகும். ஆனால் அதற்கு எதிராக 1.33 கோடி பங்குகளுக்கு எதிராக விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக பங்கு சந்தை தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது. .
இதில் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 90% ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை முதலீட்டாளர்கள் மட்டும் 1.79 மடங்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதே நேரம் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு என ஒதுக்கப்பட்ட 35.15 லட்சம் பங்குகளில், 8,800 ஈக்விட்டி பங்குகளுக்கு மட்டுமே ஏலம் பெற்றுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
Array
கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி நிறுவனம் அதன் முக்கிய முதலீட்டாளர்களிடம் இருந்து 51,55,404 ஈக்விட்டி பங்குகள் மூலம், 463.98 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இது முன்னதாக 1.718 கோடி பங்குகளாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜூலை 6 அன்று 1.26 கோடி பங்குகளாக திட்டமிட்டுள்ளது.
எப்போது முடியும்?
இதற்கிடையில் 1546.63 கோடி ரூபாய்க்கான பொது பங்கு வெளியீடு, ஜூலை 9ம் தேதி அன்று முடிவடையும். இந்த பங்கு வெளியீட்டில், ஒரு பங்கிற்கு விலையானது 880 - 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பொது பங்கு வெளியீட்டின் மதிப்பானது, சில கெமிக்கல் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, 48.2X மடங்காகும்.
நிறுவனத்திற்கு சாதகமான காரணிகள்
இந்தியாவினை பொறுத்தவரையில் இந்த சிறப்பு கெமிக்கல் தொழில் என்பது, பல MNC- களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அம்சமாக உள்ளது. இது பல்வேறு சாதகமான காரணிகளின் மத்தியில் முன்னேறி வருகின்றது.
குறிப்பாக சீனாவில் மாசு விதிமுறைகளின் மத்தியில் உற்பத்தி குறைக்கப்பட்டு வருகின்றது. ஆக இது இந்தியாவில் உற்பத்தியினை அதிகரிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. அதோடு இந்தியாவில் பிஎல்ஐ திட்டம் போன்ற அரசின் சலுகைகள், சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளுக்கு வரி அதிகம் உள்ளிட்ட பல காரணிகள், இந்திய கெமிக்கல் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன.
லாபகரமான நிறுவனம்
இதற்கிடையில் தான் தற்போது உள்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி நிறுவனம், நல்ல வலுவான லாபமுள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆக வருங்காலத்திலும் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது நல்ல ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கி, பின்னர் ஏற்றம் கண்ட சந்தையானது முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 193.58 புள்ளிகள் அதிகரித்து, 53,054.76 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 61.40 புள்ளிகள் அதிகரித்து, 15,879.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.