இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் தொடங்கிய சென்செக்ஸ், இப்போது தெளிவாக ஏற்றப் பாதையை நோக்கி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஏன் இப்படி திடீரென சென்செக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது? என்ன காரணங்கள் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
முதலில் துறை சார் இண்டெக்ஸ்களில் இருந்து தொடங்குவோம்.
நிஃப்டி இண்டெக்ஸ்
துறை சார் இண்டெக்ஸ்களில் தனியார் வங்கி மற்றும் ரியாலிட்டி துறை தவிர மற்ற துறை சார் இண்டெக்ஸ்கள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஐடி துறை ஒரு நல்ல தலைவனைப் போல 9 % ஏற்றம் கண்டு, ஒட்டு மொத்த சந்தையையும் ஏற்றத்தில் அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.
டாலர் ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமாராக 74.89 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. டாலர் மதிப்பு வரலாறு காணாத வகையில் 75.31-ஐத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. இப்போது கொஞ்சம் இந்திய ரூபாய் மதிப்பு தேறி இருப்பது கூட சந்தைகளும் ஏற்றத்துக்கு வலு சேர்க்கிறது.
பெரிய நிறுவனங்களின் ஏற்றம்
ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஹெச் டி எஃப் சி போன்ற அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகளின் விலை அதிகரித்து இருப்பதால் மட்டும் சுமார் 750 புள்ளிகள் சென்செக்ஸ் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை ஏறினால் சந்தையும் ஏறத் தானே செய்யும்.!
கொரோனா மருந்து
உலகின் அதி வேக சூப்பர் ஃபாஸ்ட் கம்ப்யூட்டர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக் கூடிய 77 ரசாயனங்கள் மற்றும் மருந்துகளை அடையாளம் கண்டு இருப்பதாகச் செய்திகள் வந்து இருக்கின்றன. இதனால் பங்குச் சந்தையில் ஒரு வித ஆஸ்வாச உணர முடிகிறது. இது கூட சந்தை தன் போக்கில் ஏற்றம் காண முக்கிய காரணமாக பார்க்கலாம்.
மற்ற சந்தைகள்
இன்று காலையில் சொன்னது போலவே, நேற்று மார்ச் 19, 2020, அமெரிக்காவின் நாஸ்டாக் 2.30 % ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல லண்டனின் எஃப் டி எஸ் இ 1.40 %, பிரான்ஸின் சி ஏ சி 2.68 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.00 % ஏற்றம் கண்டு இருக்கின்றன. இந்த செய்தி நம் இந்திய சந்தைகளையும் உயர்த்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.