இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரீடைல் வர்த்தகச் சந்தையில் சரியான திட்டமிடல் உடன் நிலையான வளர்ச்சி மூலம் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராதாகிஷன் தமனியின் டீமார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் இன்று 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு உள்ளது.
டிமார்ட் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவில் குறைந்தாலும், டிசம்பர் காலாண்டில் பெரிய அளவிலான வளர்ச்சியை எதிர்கொண்டது. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
மேலும் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனையில் ஜியோமார்ச், அமேசான், பிளிப்கார்ட் வந்த நிலையில் டிமார்ட் வர்த்தகம் கணிசமாகச் சரிந்தது. ஆனால் சில மாதங்களிலேயே டிமார்ட் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் புதிய ஆன்லைன் விற்பனை தளத்தை அறிமுகம் செய்து நாட்டின் பெரு நகரங்களில் ஆன்லைன் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் தொடர் வளர்ச்சியின் காரணமாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்று 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டிமார்ட் பங்குகள் 3,225 ரூபாய் வரையில் உயர்ந்தது, ஆனால் வர்த்தக முடிவில் 1.54 சதவீதம் சரிவில் 3,138.75 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது.