சென்னையை சேர்ந்த பிரபல முதலீட்டாளாரான டோலி கண்ணா, 1996ம் ஆண்டு முதல் பங்கு சந்தையில் முதலீடு செய்து வருபவர். இவர் அதிகளவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை வாங்குவது வழக்கம்.
அந்த வகையில் அவரின் போர்ட்போலியோவில் உள்ள ஒரு ஸ்மால் கேப் பங்கானது 300% மேலாக, கடந்த ஒராண்டில் ஏற்றம் கண்டுள்ளது. அது என்ன பங்கு?
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இனியும் இந்த பங்கின் நிலவரம் என்ன? வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்.
ஓராண்டு நிலவரம்
நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கின் பெயர் பாண்டி ஆக்சைடு & கெமிக்கல்ஸ் லிமிடெட். கடந்த 12 மாதங்களில் இந்த பங்கானது பலத்த லாபத்தினை கொடுத்து முதலீட்டாளர்களை லட்சாதிபதி ஆக்கியுள்ளது எனலாம். கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலையானது 212.8 ரூபாயில் இருந்து 920 ரூபாயினை எட்டியுள்ளது.
10 ஆண்டு நிலவரம்
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் இப்பங்கானது 330% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த அமர்வில் இந்த பங்கின் விலையானது 5% மேலாக அதிகரித்து அதன் ஆல் டைம் உச்சமான 920 ரூபாயினை எட்டியிருந்தது. இதற்கிடையில் தான் நீண்டகால முதலீட்டாளார்கள் இந்த பங்கினில் நல்ல லாபத்தினை கண்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது சுமார் 3600% ஏற்றம் கண்டுள்ளது.
டெக்னிக்கல் நிலவரம்
டெக்னிக்கலாக பார்க்கும்போது இப்பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சந்தை மூலதனம் 520 கோடி ரூபாயாக உள்ளது.
டோலி கண்ணாவின் வசம்
பிஎஸ்இ நிலவரப்படி, டோலி கண்ணாவின் வசம் மார்ச் காலாண்டில் இப்பங்கினில், 2,11,461 பங்குகள் அல்லது 3.6% பங்குகள் இருந்தன.
டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 344% அதிகரித்து, 14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வருவாய் விகிதமானது அதன் பொருட்கள் விற்பனை மூலம் 41% அதிகரித்து 413 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இப்பங்கினில் சமீப காலமாக வால்யூமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
விலை அதிகரிக்கலாம்
இதற்கிடையில் இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என கூறும் நிபுணர்கள், இலக்காக 1100 - 1150 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்துள்ளனர். பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கம் என்பது இருந்தாலும், இப்பங்கானது அதன் இலக்கினை நோக்கில் நகரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து அதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், பங்கின் விலை நேர்மறையாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய நிலவரம் என்ன?
பாண்டி ஆக்ஸைடு மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் பங்கு விலையானது கடந்த அமர்வில் பி எஸ் இ-யில் 3.83% அதிகரித்து, 910.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் கடந்த அமர்வின் உச்ச விலை 920 ரூபாயாகவும், இதே கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை 855 ரூபாயாகவும் உள்ளது. இதே இதன் கடந்த அமர்வின் நிலவரப்படி அதன் 52 வார உச்ச விலை 920 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 208 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications