ஈஷர் மோட்டார்ஸ். இந்தியாவின் பிரீமியம் ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களைத் தயாரிக்கும் முன்னணி கம்பெனி.
ராயல் என்ஃபீல்ட் பிராண்ட் ஈஷர் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது தான். இந்தியாவின் பிரீமியம் ரக (250 சிசிக்கு மேல்) இருசக்கர வாகன சந்தையில், ஒரு கணிசமான பங்கை வைத்திருக்கும் கம்பெனி ஈஷர் மோட்டார்ஸ்.
இந்த கம்பெனி பங்கின் விலை இன்று ஒரே நாளில் 9.9 % வரை அதிகரித்து இருக்கிறது. ஏன்? என்ன காரணம்? இந்த கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் எப்படி வந்திருக்கின்றன? என்பதை எல்லாம் பார்ப்போம்.
பங்கு விலை ஏற்றம்
ஈஷர் மோட்டார்ஸ் கம்பெனியின் பங்கு 1:10 என்கிற விகிதத்தில் பிரித்து இருக்கிறார்கள். அதாவது ஒரு பங்கை 10 பங்காகப் பிரித்து இருக்கிறார்கள். இப்படி பங்கை பிரிக்க கடந்த ஜூன் 2020-லேயே கம்பெனியின் இயக்குநர் குழு அனுமதி கொடுத்து இருந்தது. 1:10 பங்கு பிரிப்புக்குப் பின், ஈஷர் மோட்டார்ஸ் கம்பெனியின் முக மதிப்பு 10 ரூபாயாக இருந்தது, தற்போது 1 ரூபாயாக குறைந்து இருக்கிறது.
வியாபாரம் அதிகரிக்கும்
இந்த ஸ்டாக் ஸ்பிலிட் நடவடிக்கை உடன், சில தரகு நிறுவனங்கள், ஈஷர் மோட்டார்ஸின் டிமாண்ட், இந்தியாவின் செமி அர்பன் & கிராம புறங்களில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. வாகனங்களுக்கான புக்கிங்களும், கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் பிரச்சனை எழுவதற்கு முன் இருந்த அளவுக்கு வந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே பங்கு விலை இன்று ஒரே நாளில் சுமாராக 9.9 % அதிகரித்து இருக்கிறது.
ஈஷர் மோட்டார்ஸ் பங்கு விலை
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 2,170 ரூபாய்க்கு நிறைவடைந்ததாகச் சொல்கிறது மணி கண்ட்ரோல் வலைதளம். இன்று காலை 2,199 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 2,387 ரூபாய் வரைத் தொட்டு இருக்கிறது. ஆக முந்தைய் நாளின் குளோசிங் விலையில் இருந்து கணக்கிட்டால் 9.9 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது ஈஷர் மோட்டார்ஸ் பங்குகள்.
ஜூன் 2020 காலாண்டு முடிவுகள்
இந்த ஜூன் 2020 காலாண்டில் ஈஷர் மோட்டார்ஸ் 55 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கணக்கு காட்டி இருக்கிறது. கடந்த ஜூன் 2019-ல் 452 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கணக்கு காட்டி இருந்தது. அதே போல வருவாய் ஜூன் 2019-ல் 2,382 கோடி ரூபாயாக இருந்தது, இந்த ஜூன் 2020-ல் 818 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது.