இன்று டிசம்பர் 11, 2018-ல் இந்தியப் பொருளாதாரத்தில் பிரதிபலிப்புகள் என்று சொல்லப்படும் இந்தியப் பங்குச் சந்தைகள் அதிக ஏற்றா, இறக்கத்துடன் Volatile ஆக வர்த்தகமாக நிறைய காரணங்களை கிடைத்திருக்கின்றன. பொதுவாக மத்தியில் ஆளும் கட்சிக்கு வெற்றி கிடைத்தால் சந்தை உயரும். ஒருவேளை தோற்கிறது என்றாலோ அல்லது பழைய எண்ணிக்கையில் கூட இடங்களைப் பிடிக்கவில்லை என்றால் கூட சந்தை செம அடி வாங்கும். ஆக முதலில் ஐந்து மாநிலங்களைப் பற்றிப் பார்த்துவிடுவோம். அதன் பின் election results.
தேர்தல் மாநிலங்கள்
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம், தெலங்கானா என ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஐந்து மாநிலங்களில் சில மாநிலங்கள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டைகள்.
நிலவரம்
மத்தியப் பிரதேசத்தில் மூன்று முறை சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜக தான். அதே போல் 2000-ம் ஆண்டில் தனியாக பிரிக்கப்பட்ட மாநிலமான சத்திஸ்கரில் கூட கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பாஜக தான். இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக தன் பழை நிலையை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி இருக்க வேண்டும். இல்லை என்றால் சந்தையில் சரிவு உறுதி.
ராஜஸ்தான்
இந்த மாநிலம் ஒரு முறை காங்கிரஸ், ஒரு முறை பாஜக என 1993-ல் இருந்து மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. ஆக இந்த முறை ராஜ்ஸ்தானில் பாஜக தலை தப்பித்தால் பெரிய விஷயம் தான். ஆனால் இந்த மாநிலத் தேர்தலில் தோற்பது கூட பாஜகவின் செல்வாக்கு குறைவாக கருதப்படும். எனவே இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் சங்கு தான்.
தெலுங்கானா
சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து தனி மாநில அந்தஸ்து பெற்ற தெலுங்கானாவில் பாஜக நான்காவது பெரிய கட்சி. ஆட்சியை கலைப்பதற்கு முன் தெலுங்கானா ராஸ்ட்ர சமிதி 90, காங்கிரஸ் 13, AIMIM 7, பாஜக 5, டெலுகு தேசம் 3, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் 1 என்பது தான் நிலவரம்.
கால்பதித்தால்
தெலங்கானாவில் நிச்சயமாக பாஜக ஆட்சியைப் பிடிக்காது. ஆனால் இந்த ஐந்து சீட்டு என்கிற எண்ணிக்கை அதிகரித்தாலே தெற்கிலும் பாஜக கால் ஊன்றத் தொடங்குகிறது என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆக தெலுங்கானாவில் பாஜகவின் வெற்றிகள் நேரடியாக சந்தையை பாதிக்காது என்றாலும் மறைமுகமாக பாதிக்கும்.
மொரட்டு எதிர்ப்பு
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக என்றல்ல, மத்தியில் இருந்து எவனும் சீண்ட முடியாத லெவலுக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். சிபிஐக்கு தடை, பாஜகவின் மீது விமர்சனம், தென் இந்திய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு மூன்றாவது அணிக்கு அடித்தளம் அமைப்பது என மத்திய அரசை விரட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில் தெலுங்கானாவில் ஐந்து சீட்டுகளுக்கு மேலே ஜெயித்தால் பாஜகவின் வளர்ச்சியை ஆந்திரம் தடுக்க முடியவில்லை என்று தான் அர்த்தம்.
சம்பந்தம் இல்லை
மிசோரம் மாநிலத்தில் எப்போதுமே பாஜக ஆட்சியை அமைத்தது இல்லை. காங்கிரஸ் அல்லது மிசோரம் தேசிய முன்னனி ஆகிய இரு கட்சிகள் மட்டும் தான் ஆட்சியைப் பிடிக்கும். ஆக ஐந்து மாநிலத் தேர்தலில் மிசோரத்தின் எந்த ஒரு முடிவும் பங்குச் சந்தையை நேரடியாக பாதிக்காது. சரி தற்போதைய சந்த நிலவரத்துக்கு வருவோம்
தேர்தல் முடிவுகள்
காலை 9.32 மணி அளவில் மத்தியப் பிரதேசம் (230) காங்கிரஸ் - 66, பாஜக - 59 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள். ராஜஸ்தானில் காக்கிரஸ் - 84, பாஜக - 71 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள். சத்திஸ்கரில் காங்கிரஸ் - 42, பாஜக - 27 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள். தெலுங்கானாவில் டிஆர்எஸ் - 83, காங்கிரஸ் கூட்டனி - 18 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள். மிசோரத்தில் மிசோரம் தேசிய முன்னனி - 16, காங்கிரஸ் - 6 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள்.
சந்தை நிலவரம்
நிஃப்டி தொடக்கத்திலேயே 147 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. சென்செக்ஸ் 493 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டியின் துறை வாரியான சந்தைகளில் நிஃப்டி பொதுத் துறை வங்கிகள் தவிர மற்ற அனைத்து சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ சந்தையில் அனைத்து துறை சார்ந்த சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன.
பாஜக பின்னடைவு
மத்தியில் ஆளும் பாஜகவின் பின் அடைவு தான் இந்த சரிவுக்கு காரணம் என அனலிஸ்டுகளை சொல்கிறார்கள். தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு இன்று மாலை ஐந்து மணி வரை கூட ஆகலாம் எனவே. வரும் அறைகுறை செய்திகளால் இன்னும் எவ்வளவு இறக்கம் காண இருக்கிறது எனத் தெரியவில்லை.
ஏற்றம்
இந்த கலவரமான நிலவரத்தில் கூட யெஸ் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுசிங், டெக் மஹிந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கெயில் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இறக்கம்
இண்டஸ் இந்த் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி போன்ற நிறுவன பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
உலகச் சந்தைகள்
ஆசியச் சந்தைகளில் தைவான் சந்தை, கோஸ்பி என்கிற தென் கொரியச் சந்தை, ஷாங்காய் காம்போசைட் என்கிற சீன சந்தைகள் மட்டும் தான் சற்று நிலையாக ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹேங்செங், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் என எல்லாமே இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன.
மேற்கத்திய சந்தைகள்
இன்று காலையே அமெரிக்காவின் நாஸ்டாக் நிலையாக ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. நேற்று ஐரோப்பிய சந்தைகளான லண்டன் பங்குச் சந்தை, பிரான்ஸ் பங்குச் சந்தைகள் மற்றும் ஜெர்மானிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
நஷ்டம்
இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளால் மட்டும் இன்று காலையில் இருந்து சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் தங்கள் பணத்தை இந்திய பங்குச் சந்தைகளில் இழந்திருக்கிறார்களாம்.