கடந்த ஆகஸ்ட் 23, 2019 வெள்ளிக்கிழமை அன்று நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட்டில் அறிவித்த பல்வேறு விஷயங்களை கமுக்கமாகப் பின் வாங்கினார். குறிப்பாக அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் மீது விதித்து இருந்த வரிகளை எல்லாம் நீக்கினார். ஆனால் இது வரை சந்தையின் செண்டிமெண்டையோ அல்லது முதலீட்டாளர்கள் மனநிலையையோ அந்த அறிவிப்புகள் மாற்றவே இல்லை.
இது போக உள்நாட்டு முதலீட்டாளர்கள் மீது இருந்த மூல தன ஆதாய வரிகளையும் நீக்கினார். ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த விஷயங்களுக்கு எல்லாம் மசிந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக தங்கள் முதலீடுகளை விற்று பணத்தை வெளியில் எடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் சுமாராக 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் கடந்த ஆகஸ்ட் 23, 2019-ல் இருந்து சுமாராக 5,500 கோடி ரூபாயை சந்தையில் இருந்த தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்.
மோசமான கார்ப்பரேட் வருமானங்கள், இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் கொடுக்க போதுமான நிதி நிறுவனங்கள் இல்லாமல் இருப்பது மற்றும் பொருளாதார மந்த நிலை என எல்லாம் சேர்ந்து அந்நிய நேரடி முதலீட்டாளர்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது அதனால் தான் அவர்கள் இப்போது இந்தியாவில் முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள் என அனலிஸ்டுகள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
அதோடு மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து வரப் போகும் 1.76 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவில் உள்ள சூழல்களை வேண்டுமானால் சரி செய்யலாம். ஆனால் உலக பொருளாதார சூழல்கள் காரணமாக இந்திய சந்தைகள் இந்த ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு உள்ளூர் காரணிகளும் சரி, உலக பொருளாதார காரணிகளும் சரி சம அளவில் பங்கெடுக்கின்றன. இந்தியா தன் வரி விகிதங்களை மாற்றி அமைத்து நிறைய உள்கட்டமைப்பு முதலீடுகளை கொண்டு வருவது தான் முக்கியம் எனச் சொல்லி இருந்தார் உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான மார்க் மொபியஸ். ஆனால் அவர் சொன்னது போலவே இந்தியாவின் பங்குச் சந்தை சார்ந்த வரி விகிதங்கள் குறைத்தும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களின் மன நிலை மாறவில்லை என்பது தான் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.