இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நிதி பற்றாக்குறை, ரிசர்வ் வங்கி எச்சரிக்கை எனக் கடந்த சில வாரங்களாக முதலீட்டுச் சந்தையில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், அதனை ஈடு செய்யும் வகையில் பல அறிவிப்புகள் வந்த காரணத்தால் தொடர்ந்து முதலீட்டுச் சந்தை சிறப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.
இதன் வாயிலாக ஜூன் 4ம் தேதி முடிந்த வாரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 6.8 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்தது. இதன் எதிரொலியாக நாட்டின் மொத்த அன்னிய செலாவணி அளவீடு 605 பில்லியன் டாலர் அளவிலான உயர்வை அடைந்தது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக அன்னிய செலாவணி 600 பில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டி புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. தற்போது இருக்கும் அன்னிய செலாவணியை வைத்து அடுத்த 16 மாதங்களுக்கான இறக்குமதியை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும் எனக் கணிக்கிடப்பட்டு உள்ளது.
இதேவேளையில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் கொள்கை ஏதேனும் மாற்றப்பட்டால் இந்திய சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் வெளியேற வாய்ப்புகள் உள்ளது என ரிசர்வ் வங்கியின் கவர்னரான சக்திகாந்த தாஸ் சந்தையை எச்சரித்துள்ளார்.
இந்தியா தற்போது ரஷ்யாவின் அன்னிய செலாவணி-க்கு இணையாக உயர்ந்துள்ளது, ரஷ்யாவின் அளவீட்டை அடைய இன்னும் 200 மில்லியன் டாலர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.