இந்தியப் பங்குச் சந்தைகளில், வெளிநாட்டுப் போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) மார்ச் 2026-ல் இதுவரை ரூ.88,180 கோடி (சுமார் $9.6 பில்லியன்) தொகையை திரும்பப் பெற்றுள்ளனர். NSDL தரவுகளின்படி, மார்ச் 20 வரை ஒவ்வொரு வர்த்தக நாளிலும் நிகர விற்பனையாளர்களாகவே இருந்தனர், இது சமீப காலத்தின் மிகப்பெரிய விற்பனைப் போக்காகும்.
இந்த வெளியேற்றம் அக்டோபர் 2024-ன் ரூ94,017 கோடி சாதனையை விட சற்று குறைவு. பிப்ரவரியில் ரூ.22,615 கோடி (17 மாதங்களில் அதிகபட்சம்) முதலீடு செய்யப்பட்ட பிறகு, முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்ட இந்த கூர்மையான மாற்றம், 2026-ன் மொத்த FPI வெளியேற்றத்தை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டச் செய்துள்ளது. இந்த விற்பனைக்கு மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களே முதன்மைக் காரணம் என சந்தைப் பங்கேற்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீண்டகால மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகத் தடை குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன. இதன் விளைவாக, ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100-ஐ தாண்டியுள்ளது. ஏஞ்சல் ஒன் மூத்த ஆய்வாளர் வகர்ஜாவேத் கான், கச்சா எண்ணெய் விலை உயர்வு முக்கிய தூண்டுதலானது என்றார். ரூ93-க்கு அருகில் பலவீனமடைந்த ரூபாய், அமெரிக்க பத்திரங்களின் அதிக லாபம், பிப்ரவரி மாத லாபப் பதிவு, நான்காம் காலாண்டு வருவாய் அழுத்தங்கள் ஆகியவையும் கூடுதல் காரணங்கள் என அவர் விளக்கினார்.
மார்னிங்ஸ்டார் ஆய்வாளர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா, அமெரிக்க பத்திரங்களின் லாப அதிகரிப்பை முக்கிய காரணியாக சுட்டினார். அதிக லாபம் டாலர் சொத்துக்களை நோக்கி ஈர்க்க, இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து மூலதனம் வெளியேறுகிறது. இது வலுவான டாலர், இறுக்கமான உலகளாவிய பணப்புழக்கத்துடன் இணைந்து பங்கு மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது என்றார்.
ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைமை நிபுணர் வி.கே.விஜயகுமார், உலகளாவிய பங்குச் சந்தைப் பலவீனம், ரூபாய் மதிப்பு சரிவு, உயர்ந்த கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணிகளின் தொகுப்பே FPI விற்பனையைத் தீவிரப்படுத்தியது என்றார். துறைவாரியாக, நிதிச் சேவைத் துறைப் பங்குகள் பெரும் சுமையைத் தாங்கின. மார்ச் 15-உடன் முடிவடைந்த இரு வாரக் காலப்பகுதியில், FPI-கள் இந்தப் பங்குகளிலிருந்து ரூ.31,831 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
சந்தையில் நிலையற்ற தன்மை நீடிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். புவிசார் அரசியல் பதட்டங்கள் அல்லது எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்தால் வெளியேற்றங்கள் தொடரலாம். பதட்டங்கள் தணிவது, உள்நாட்டு முதலீட்டாளர் ஆதரவு, நேர்மறையான வருவாய் போன்றவை சந்தையை நிலைப்படுத்த உதவும். புவிசார் அபாயங்கள் குறைந்து உலகளாவிய சந்தை ஸ்திரத்தன்மை திரும்பும்போதே FPI முதலீடுகளில் நீடித்த மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications