பொதுவாக பங்கு சந்தை முதலீட்டில் மருத்துவ துறை என்றாலே நீண்டகால நோக்கில் சராசரியான வருமானம் கொடுக்கும் பங்குகளாக இருக்கும். இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு இருக்காது என்பது பங்கு சந்தை முதலீட்டாளர்களின் எண்ணம்.
அப்படி இருக்கையில் மருத்துவ துறை சார்ந்த ஒரு நிறுவனம் தனது பங்கு வெளியீட்டினை செய்கிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன?
அதனால் தான் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் ஐபிஓ-வின் முதல் நாளே முதலீடு களை கட்டியுள்ளது எனலாம்.
சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
பொதுவாக பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்பார்கள். ஏனெனில் நல்ல நல்ல நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலையில் வாங்க முடியுமே. அப்படி வெளியிடப்பட்ட பங்கு தான் குளோபல் ஹெல்த் லிமிடெட் நிறுவனம் (மெடாண்டா). அதுவும் மருத்துவ துறை சார்ந்த பங்கு என்பதால் இது முதலீட்டாளார்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தினையும் தூண்டியுள்ளது.
முதல் நாளே அமோக வரவேற்பு
குளோபல் ஹெல்த் பங்கு வெளியீட்டின் முதல் நாளே நல்ல வரவேற்பு இருந்ததாகவும், 26% சந்தாவினை பெற்றுள்ளது.
இந்த குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் பங்கு வெளியீடானது நவம்பர் 3 அன்று தொடங்கி, நவம்பர் 7 அன்று முடிவடையவுள்ளது. இந்த வெளியீட்டில் விலை 319 - 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
மொத்த வெளியீடு எவ்வளவு?
இந்த பங்கு வெளியீட்டில் 500 கோடி ரூபாய்க்கான புதிய பங்குகள் வெளியீடு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் 5,07,61,000 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதன் ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து 662 கோடி ரூபாய் திரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 2206 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது.
தரகு நிறுவனங்கள் பரிந்துரை
இந்த வெளியீட்டில் புதிய வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது அதன் கடனை திரும்ப செலுத்துவதற்கும், நிறுவனத்தின் பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் திரட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த வெளியீட்டில் இந்த பங்கினை வாங்கலாம் என அஷிகா ஆய்வு நிறுவனம், ஜியோஜித் தரகு நிறுவனம் உள்பட பல தரகு நிறுவனங்களும் பரிந்துரை செய்துள்ளன.
ஏன் வாங்கலாம்?
அஷிகா ஆய்வு நிறுவனத்தின் கணிப்பின் படி, மெடாண்டா நிறுவனம் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதனை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றது. வளர்ச்சியினை மேம்படுத்தி வருகின்றது. முக்கிய நகரங்களில் அதன் இருப்பினை வலுப்படுத்தி வருகின்றது. குறிப்பாக அதன் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்தி வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கு ஏதுவான கட்டணத்தில் சேவையினை வழங்கி வருகின்றது. தொடர்ச்சியாக அதன் தொழில்நுட்பம், புதிய கருவிகள் மற்றும் செயல்பாடுகளையும் மேம்படுத்துவதன் மூலம் எதிர்கால வளர்ச்சியினையும் உறுதிபடுத்தி வருகின்றது.
சாய்ஸ் புரோக்கிங்
சாய்ஸ் புரோக்கிங் நிறுவனமும் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. சர்வதேச அளவில் சுகாதாரத்துறையின் தேவையானது அதிகரித்து வருகின்றது. அதோடு போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போதும் இதன் பங்கு விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம். இது சக போட்டியாளர்களின் பங்கு விலையுடன் ஒப்பிடும்போதும் குறைந்த விலையில் தான் உள்ளது. ஐபிஓவில் கொடுக்கப்பட்ட விலையானது முதலீட்டாளர்களை கவரும் விதமாக உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் இது வலுவான ஏற்றத்தினை காணலாம். பல தரகு நிறுவனங்களும் இந்த நிறுவன பங்கினை வாங்கி வைக்க பரிந்துரை செய்துள்ளன. ஆக இந்த நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைக்கலாம் என சாய்ஸ் புரோக்கிங் நிறுவனமும் தெரிவித்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.