சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவிலேயே இருந்து வருகின்றது. இது அவ்வப்போது சற்று ஏற்றம் கண்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தொடர்ந்து 74 ரூபாய்க்கு மேலாக இருந்து வருகின்றது.
இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 பைசா அதிகரித்து 74.48 ரூபாயாக அதிகரித்து தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.57 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டா இன்று வெளியாகவிருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
அதோடு இந்திய பங்கு சந்தையிலும் வாங்குவது அதிகரித்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பானது ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 376.41 புள்ளிகள் அதிகரித்து, 52,749 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 109.15 புள்ளிகள் அதிகரித்து, 15,801 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் ஏற்றத்தில் காணப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் வரலாற்று உச்சத்தில் காணப்பட்டன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது.
எப்படியிருப்பினும் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது ரூபாயின் சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்திய ரூபாயின் இந்த மோசமான சரிவுக்கு, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருவதும் ஒரு காரணம். இது இந்தியாவின் வர்த்தக சம நிலையை பாதிக்கலாம் என ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பி.எல்.சியின் பருல் மிட்டல் சின்ஹா கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு மற்றும் ஆர்பிஎல் பாங்க் லிமிடெட் ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் 76 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்துள்ளனர். இதே டாய்ச் வங்கியானது 75 ரூபாயாக கணித்திருந்தது. இதற்கிடையில் தற்போது ரூபாயின் மதிப்பானது கிட்டதட்ட 74.47 ரூபாயாக சற்று அதிகரித்து காணப்படுகிறது.