இன்று நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்த சரிவை எதிர்கொண்ட காரணத்தால் ரூபாய் மதிப்பு 3 வாரச் சரிவை எட்டியுள்ளது. இந்தச் சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் வர்த்தகச் சந்தைக்குள் டாலர் புழக்கத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக 72 ரூபாய் அளவில் தொடர் உயர்வைச் சந்தித்து வந்த டாலர் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 73.70 ரூபாய் வரையில் உயர்ந்து, மாலை வர்த்தகத்தில் 73.48 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
அமெரிக்கப் பத்திர சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் காரணத்தால் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்த அன்னிய முதலீடுகள் அமெரிக்கச் சந்தையில் குவிந்த காரணத்தால் உலக நாடுகளில் டாலருக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
இதன் வாயிலாகவே அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய், யென், மற்றும் இதர முக்கிய வர்த்தக நாடுகளின் நாணயங்களின் மதிப்பு குறைந்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் பத்திர முதலீட்டில் அதிக லாபம் கிடைக்க முக்கியக் காரணம் அமெரிக்க அரசு அறிவித்துள்ள 1.9 டிரில்லியன் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டம் மற்றும் அமெரிக்கா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து தான்.