தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இந்திய பங்கு சந்தையில் பலத்த சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக தொடர்ச்சியாக 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.55 ரூபாய் என்ற லெவலில் தொடங்கியது. இது மீண்டும் வரலாற்று சரிவினை கண்டுள்ளது.
ரூபாய் சரிவு?
கடந்த அமர்வில் 80.99 ரூபாயாக முடிவடைந்திருந்த ரூபாயின் மதிப்பானது, இன்று 81.55 ரூபாயாக தொடங்கிய நிலையில், அது தற்போது 81.52 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.
கடந்த 9 வர்த்தக அமர்வுகளில் 8 அமர்வில் ரூபாயின் மதிப்பானது 2.28% சரிவில் காணப்படுகின்றது.
வட்டி அதிகரிப்பு
கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியும் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பின்னர் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என்றாலும், தற்போதைக்கு முதலீடுகள் வெளியேறவே ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவு வழிவகுக்கலாம்.
ரிசர்வ் வங்கி கூட்டம்
எனினும் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்னவாகுமோ என்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. பல தரப்பினரும் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். செப்டம்பர் 30 அன்று ரிசர்வ் வங்கியின் முடிவு வெளியாகவுள்ளது.
கவனிக்க வேண்டியவை
சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மையே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனினும் இந்திய அரசின் நடவடிக்கையும், ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளுக்கு மத்தியில் சற்றே பணவீக்கம் குறையத் தொடங்கினாலும், சர்வதேச காரணிகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.