புதிய கொரோனா வைரஸ் பரவல் செய்தி இந்தியா மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசிய சந்தையைப் புரட்டிப்போட்டு உள்ளது. மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே பெரும் சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களுக்கா அதிர்ச்சி கொடுத்தது.
இன்றைய வர்த்தகம் முழுவதும் தொடர்ந்து சரிவிலேயே இருந்த காரணத்தால் சென்செக்ஸ் அதிகப்படியாக 1800 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 500 புள்ளிகளும் இழந்துள்ளது.
பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை முதலீட்டின் மீது அதிகப்படியான லாபத்தை முதலீட்டாளர்கள் பெற்று வந்தது நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் சென்செக்ஸ் அக்டோபர் 18ஆம் தேதி 62,245 புள்ளிகளையும், நிஃப்டி 18,604 புள்ளிகள் என்ற உச்ச நிலையில் இருந்து தற்போது 8 சதவீத வரையிலான சரிவைப் பதிவு செய்துள்ளது.
ரூ.14 லட்சம் கோடி இழப்பு
இந்த 8 சதவீத சரிவில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். இதில் வெள்ளிக்கிழமை மட்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சுமார் 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியத் துறைகள்
இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக ரியாலிட்டி, மெட்டல், வங்கி, ஆட்டோமொபைல் துறை அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் கொரோனா தொற்றுக் காரணமாகப் பார்மா துறை மட்டும் உயர்வுடன் காணப்படுகிறது. இதேபோன்ற நிலை தான் 2020லும் உருவானது.
கரெக்ஷன்
இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவிலான கரெக்ஷன் உருவாகும் எனப் பலரும் கணித்திருந்த நிலையில் தற்போது புதிய கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டு உள்ளது. இந்த வர்த்தகச் சரிவுக்கு மிக முக்கியக் காரணம் பன்னாட்டு முதலீட்டாளர்கள்.
B.1.1529 ரகக் கொரோனா வைரஸ்
கொரோனா தொற்றும், கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்தும் மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் B.1.1529 ரகக் கொரோனா வைரஸ் போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் பரவி வருகிறது.
3 நாடுகள்
இந்நிலையில் இந்தியாவில் இதன் பரவலைத் தடுக்க மத்திய அரசு இந்த 3 நாடுகளில் இருந்தும், 3 நாடுகள் வழியாக அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் தீவிர கண்காணிப்புச் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டால் இதுவரை ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி அனைத்தும் வீணாகி விடும்.
மத்திய அரசின் அறிவிப்பு
உலக நாடுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ்-ல் இதுதான் மிகவும் அதிகப்படியான மியூடேஷன் கொண்ட வைரஸ் ஆக உள்ளது. புதிய வைரஸ் தொற்றும், மத்திய அரசின் அறிவிப்பும் மும்பை பங்குச்சந்தையில் பெரிய அளவில் பாதித்துள்ளது.
கோவிட் 19 பூஸ்டர் வேக்சின்
புதிய கொரோனா தொற்றுப் பரவி வரும் காரணத்தால் ஐரோப்பிய நாடுகள் கோவிட் 19 பூஸ்டர் வேக்சின் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஊரடங்கு விதிமுறைகளை இரவோடு இரவாக அதிகரித்துள்ளது. ஸ்லோவாக்கியா இரண்டு வார லாக்டவுன்-ம், செக் குடியரசு மற்றும் ஜெர்மனி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
மீண்டும் இந்தியாவில் லாக்டவுன்..?!
மத்திய அரசு போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங் ஆகிய 3 நாடுகளில் இருந்தும், 3 நாடுகள் வழியாக வரும்அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் தீவிர கண்காணிப்பு உத்தரவிட்டு உள்ளனர். இந்தியாவில் B.1.1529 ரகக் கொரோனா வைரஸ் பரவினால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.